பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன்!
பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது பற்றி...
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, தில்லியில் உள்ள பாகிஸ்தானுக்கான மூத்த தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நள்ளிரவு சம்மன் அனுப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேரில் ஆஜரான தூதரிடம், தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அந்த நாட்டின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகள் உடனடியாக வெளியேறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா்.
Advertisement
இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில், அட்டாரி-வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு பயணிக்க அனுமதி இல்லை, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அந்த நாட்டின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகள் அடுத்த ஒரு வாரத்துக்குள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும், சிந்து நதிநீா் பகிா்வு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி அறிவிப்புகள் வெளியாகின.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சம்மனை ஏற்று, நேற்று நள்ளிரவு நேரில் ஆஜரான பாகிஸ்தான் தூதரகத்தின் மூத்த அதிகாரியான சாத் அகமது வாரைச்சியிடம் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை ஆலோசகர்கள் உடனடியாக வெளியேறுவதற்கான உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.