பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளைத் தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்ட அமெரிக்க ஊடகம்
பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளைத் தீவிரவாதிகள் என்று குறிப்பிட்ட நியூயார்க் டைம்ஸ் செய்தி ஊடகத்துக்கு அமெரிக்க அரசு கண்டனம்
நியூயார்க் டைம்ஸ் செய்தி ஊடகத்தில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் மட்டுமின்றி, பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்ட சர்வதேச செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை `தீவிரவாதிகள்’ என்று குறிப்பிட்டது. நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தச் செயலுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Advertisement
இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது, இது தீவிரவாதிகளின் தாக்குதல் அல்ல; இது ஒரு பயங்கரவாதத் தாக்குதலே. உங்கள் தவறை நாங்களே சரி செய்து விடுகிறோம். இந்தியாவாக இருந்தாலும் சரி, இஸ்ரேலாக இருந்தாலும் சரி, பயங்கரவாதம் என்றால் பயங்கரவாதம்தான். பயங்கரவாதம் என்ற விஷயத்தில் மட்டும் உண்மையில் இருந்து நியூயார்க் டைம்ஸ் விலகி விடுகிறது என்று தெரிவித்தது.
தீவிரவாதம் என்பதற்கும் பயங்கரவாதம் என்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. தீவிரவாதம் என்பது அரசியல் அல்லது ஒரு சமூக மாற்றத்துக்காக கடுமையாகப் போராடும் கிளர்ச்சியாளர்களைக் குறிக்கும்.
ஆனால், பயங்கரவாதம் என்பது நாட்டுக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவர்கள். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து ஊடுருவி, குறிப்பிட்ட நாட்டுக்குள் பயங்கரவாதத்தை ஏற்படுத்துவார்கள். இவர்கள் ஆயுதம் ஏந்தி, வன்முறையில் ஈடுபடுவதுடன், அப்பாவி மக்களையும் தாக்குவர்.