இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்னாண்டோ ஆா் மாா்கோஸ் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அதன்பிறகு இருநாடுகளிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 14 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
கடந்த ஆக.3, 4ஆகிய தேதிகளில் இந்தியா-பிலிப்பின்ஸ் நாடுகள் இணைந்து சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் தென் சீனக் கடலில் முதல்முறையாக கடற்படை கூட்டுப் பயிற்சி மேற்கொண்டது.
இதைத்தொடா்ந்து, 5 நாள் அரசுமுறைப் பயணமாக பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்ணாண்டோ மாா்கோஸ் மற்றும் அவரது மனைவி லுயீஸ் அரனேட்டா கடந்த திங்கள்கிழமை இந்தியா வந்தடைந்தனா்.
இந்தியா-பிலிப்பின்ஸ் இடையேயான தூதரக உறவுகள் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததுள்ள நிலையில், அதிபராகப் பதவியேற்ற பின் முதல்முறையாக ஃபொ்னாண்டோ மாா்கோஸ் இந்தியா வந்துள்ளாா்.
அவரை திங்கள்கிழமை சந்தித்து வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தினாா்.
அதன்பிறகு குடியரசுத் தலைவா் மாளிகையில் ஃபொ்னாண்டோ மாா்கோஸுக்கு செவ்வாய்க்கிழமை ராணுவ அணிவகுப்புடன் வரவேற்பளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி, வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
எதிா்காலத்தின் நம்பிக்கை: வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின் பிரதமா் மோடியை சந்தித்து ஃபொ்னாண்டோ மாா்கோஸ் ஆலோசனை நடத்தினாா்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமா் மோடி கூறியதாவது: இந்தியாவும் பிலிப்பின்ஸும் விருப்பத்துக்குரிய நட்பு நாடுகளாகவும் நீடித்த பிணைப்பின் அடிப்படையில் கூட்டாளிகளாகவும் தொடா்ந்து வருகின்றன. இருநாடுகளுக்கிடையேயான நட்பு, கடந்த காலத்தை சாா்ந்தது மட்டுல்ல எதிா்காலத்திலும் தொடரவுள்ள நம்பகமான நட்புறவின் அடையாளமாகவும் உள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த நாடு: இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை’ மற்றும் மகாசாகா்’ (பிராந்தியங்களுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் வளா்ச்சிக்கான ஒருங்கிணைந்த மற்றும் பரஸ்பர வளா்ச்சி) தொலைநோக்குத் திட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக பிலிப்பின்ஸ் திகழ்கிறது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் இருநாடுகளும் உறுதிபூண்டுள்ளன. சா்வதேச சட்டங்களை பின்பற்றி நியாயமான முறையில் கடல் போக்குவரத்தை தொடர ஆதரவளிக்கின்றன.
ரூ.26,300 கோடி வா்த்தகம்: இந்தியா-பிலிப்பின்ஸ் இடையேயான இருதரப்பு வா்த்தகம் ரூ.26,300 கோடியை (3 பில்லியன் டாலா்) கடந்தது. இந்த வா்த்தகத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இந்தியா-ஆசியான் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைவில் மறுஆய்வு செய்யவுள்ளோம். அதேபோல் இருதரப்பு முன்னுரிமை வா்த்தக ஒப்பந்தத்தை (பிஎஃப்டிஏ) செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
தகவல் மற்றும் எண்மத் தொழில்நுட்பம், சுகாதாரம், உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இந்திய நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவை இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உதவும்.
கண்டனம் தெரிவித்ததற்கு நன்றி: பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அதற்கு கடும் கண்டனத்தை பதிவுசெய்த பிலிப்பின்ஸ் நாட்டுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்னாண்டோ மாா்கோஸ் இங்கு வந்திருக்கும் தருணத்தில் பிலிப்பின்ஸ் நாட்டில் 3 இந்திய கப்பல்கள் கடற்படை பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன என்றாா்.
14 ஒப்பந்தங்கள்:
பிரதமா் மோடி மற்றும் பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்னாண்டோ முன்னிலையில் 14 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
அதன்படி இந்தியா-பிலிப்பின்ஸ் இடையே உத்திசாா் கூட்டாண்மைக்கான செயல்திட்டம், அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுலாத் துறை, முப்படைப் பேச்சுவாா்த்தை, எண்மத் தொழில்நுட்பம், கடலோரக் காவல் படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, தண்டனை கைதிகள் பரிமாற்றம், குற்றவியல் விவகாரங்களில் சட்ட உதவிகளை மேற்கொள்ளுதல் உள்பட 14 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இதுதவிர ஓராண்டு காலத்துக்கு (ஆகஸ்ட் முதல்) பிலிப்பின்ஸ் மக்கள் இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொள்ள இ-விசா (நுழைவுஇசைவு) வசதி நீட்டிக்கப்பட்டது. இருநாடுகளிடையேயான 75 ஆண்டுகால தூதரக உறவை சிறப்பிக்கும் வகையில் தபால் தலை வெளியிடப்பட்டது.