யுபிஐ சாதனை! ஒரே நாளில் ரூ. 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள்!
இந்தியாவில் யுபிஐ பணப்பரிவர்த்தனை எண்ணிக்கை பற்றி...
இந்தியாவில் யுபிஐ மூலமாக ஒரேநாளில் 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் யுபிஐ உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் புதிய சாதனையாக, கடந்த ஆக. 2 ஆம் தேதி இந்தியாவில் 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது போன்பே, கூகுள் பே, பேடிஎம், பிம், அமேசான் பே, யோனா எஸ்பிஐ போன்ற வங்கி செயலிகள் உள்ளிட்ட அனைத்து செயலிகளும் அடங்கும்.
கடந்த 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது யுபிஐ பணப்பரிவர்த்தனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 2023ல் 35 கோடியாக இருந்த எண்ணிக்கை கடந்த 2024 ஆகஸ்டில் 50 கோடியாக அதிகரித்த நிலையில் தற்போது 70 கோடியாக உயர்ந்துள்ளது.
Advertisement
கடந்த ஜூலை மாதத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 65 கோடி பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. தற்போது 85% பணப்பரிவர்த்தனைகள் யுபிஐ மூலமாக நடைபெறுவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஒருநாள் யுபிஐ பணப்பரிவர்த்தனை 100 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.