நாட்டின் 76-வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு தில்லி முதல்வர் அதிஷி மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தலைநகரில் உள்ள சத்ரசல் அரங்கத்தில் நடைபெற்ற குடியரசுத் தின நிகழ்ச்சியில் முதல்வர் அதிஷி உரையாற்றினார். அவரது உரையில்,
நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை மக்கள் நினைவுகூர வேண்டும்.
பகத்சிங், மகாத்மா காந்தி, லாலா லஜபதிராய், சந்திரசேகர் ஆசாத் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களைப் பற்றி அல்ல, நாட்டைப் பற்றியே நினைத்தார்கள். அவர்களின் தியாகம் தன்னை மேலும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்வதில் பி.ஆர். அம்பேத்கரின் தலைமையில் வரைவு செய்யப்பட்ட அரசியலமைப்பின் பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் பாபா சாகேப் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது நமது பொறுப்பு. நமது அரசியலமைப்புச் சட்டம் சம வாய்ப்புகளை முன்னிறுத்துகிறது, இதை நனவாக்க தில்லி அரசு அயராது உழைத்து வருகிறது என்று அவர் கூறினார்.
தில்லி அரசு முக்கிய துறைகளில், குறிப்பாகக் கல்வி மற்றும் சுகாதாரத்தில் மேற்கொண்ட முன்னேற்றங்களை அதிஷி குறிப்பிட்டார். தில்லியில் அரசுப் பள்ளிகள் மோசமான நிலையிலிருந்த காலம் இருந்தது. பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்கவில்லை, இது வறுமையை நிலைநிறுத்தியது.
இன்று, தில்லி அரசுப் பள்ளிகள் தரமான கல்வியை வழங்குவதன் மூலம் இந்த குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளன என்பதை நான் பெருமைப்படுகிறேன் என்று அவர் கூறினார்.
மொஹல்லா கிளினிக்குகள் உ்ள்பட நகரின் இலவச சுகாதார முயற்சிகளையும், குடியிருப்பாளர்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் போன்ற சாதனைகளையும் முதல்வர் பாராட்டினார்.
இலவச மருத்துவம் மற்றும் 24x7 மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் தில்லி. நமது விடுதலைக்காகப் போராடியவர்களின் கனவுகளை நனவாக்கும் படிகள் இவை.
ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் மற்றும் சம வாய்ப்புகள் கிடைக்கும். சுதந்திரப் போராட்ட வீரர்களால் கற்பனை செய்யப்பட்ட ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான தில்லி அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.