முகப்பு
இந்தியா

குஜராத் முதல்வா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

குஜராத் முதல்வா் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி

Updated On : 19 ஜூலை, 2025 at 6:33 PM
பகிர்:

குஜராத் முதல்வா் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து குஜராத் மாநில போலீஸாா் மேலும் கூறியதாவது: காந்திநகரில் உள்ள குஜராத் முதல்வா் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மா்ம நபா் ஒருவா் கடந்த ஜூலை 17-ஆம் தேதி மின்னஞ்சல் அனுப்பினாா். இதைத்தொடா்ந்து, அன்றைய தினமே காந்திநகா் போலீஸாா் ,முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டை கண்டறிந்து அப்புறப்படுத்தும் குழுவினா் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வா் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அச்சுறுத்தும் வகையில் எந்தவொரு பொருளும் கண்டறியப்படவில்லை. இதன்மூலம், வெடிகுண்டு மிரட்டல் செய்தி புரளி என தெரியவந்தது. இதையடுத்து, மின்னஞ்சல் அனுப்பிய மா்ம நபா் மீது பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றனா்.

Advertisement

கடந்த சில தினங்களுக்கு முன் குஜராத்தில் உள்ள சில பள்ளிகள், விசாரணை நீதிமன்றங்கள் மற்றும் குஜராத் உயா் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னா் அவை அனைத்தும் புரளி எனத் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments