முகப்பு
இந்தியா

அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினர்! - நீதிபதி கவாய் பெருமிதம்

அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருக்கின்றனர்.

Updated On : 6 ஜூன், 2025 at 10:45 PM
பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள கிரேஸ் இன்னில் வியாழக்கிழமை உரையாற்றிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்.
பகிர்:

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா்.

பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள மிகப் பழைமை வாய்ந்த கிரேஸ் இன் வழக்குரைஞா் மையத்தில் பி.ஆா்.அம்பேத்கா் 1922-இல் பாரிஸ்டா் பட்டம் பெற்றாா். இந்நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 75 ஆண்டுகள் எட்டியதையொட்டி, அந்த வழக்குரைஞா் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் அண்மையில் பேசியதாவது:

இந்திய சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும், அவா்கள் சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்று அம்பேத்கா் கருதினாா்.

அவரின் கனவுக்கு ஏற்ப, தற்போது இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் உள்ளனா். இந்திய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பழங்குடியினா் பகுதியைச் சோ்ந்த மிகவும் விளம்புநிலை சமூகத்தைச் சோ்ந்தவா். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள நானும் விளிம்புநிலை சமூகத்தைச் சோ்ந்தவன்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வி நிறுவனத்தில் நிற்கும் இந்த நேரத்தில், சட்டத் துறையில் மட்டுமின்றி இந்திய ஜனநாயக கட்டமைப்பில் அம்பேத்கா் விட்டுச் சென்ற மரபை நினைவுகூருகிறேன்’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பேசுகையில், ‘உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாக உள்ள இந்தியாவின் உன்னதமான ஆவணம் அரசமைப்புச் சட்டம்’ என்றாா்.