பிரதமரின் பாதுகாப்பு பணியில் ’மகளிர் மட்டும்’ !
சர்வதேச மகளிர் நாள் விழாவில் பிரதமரின் பாதுகாப்பு பணியில் முழுவதும் பெண் காவல் அதிகாரிகளை ஈடுபடுத்தத் திட்டம்
குஜராத்தில் பிரதமருக்கான பாதுகாப்பு பணியில் முழுவதும் பெண்களே ஈடுபடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் தேதியில் சர்வதேச மகளிர் நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், குஜராத் மாநிலம் நவ்சரி மாவட்டத்தில் நடைபெறும் மகளிர் நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நாளை கலந்துகொள்ள உள்ளார்.
இந்த நிலையில், விழாவில் பிரதமர் மோடியின் வருகை முதல் விழா நிறைவு பெறும்வரையில் அவருக்கு பெண்களே பாதுகாப்பளிப்பார்கள் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.
மேலும், குஜராத்தை பாதுகாப்பதில் பெண்கள் எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்பதை இதன் மூலம் வெளிப்படுத்த முடியும் என்றும் கூறினார்.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக நிகழவிருக்கும் பிரதமருக்கான இந்த பாதுகாப்பு பணியில் 2,100-க்கும் மேற்பட்ட காவலர்கள், 187 உதவி ஆய்வாளர்கள், 61 ஆய்வாளர்கள், 16 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 5 காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு காவல்துறை தலைவர், ஒரு கூடுதல் காவல்துறை இயக்குநர் என அனைவரும் பெண்களாகவே ஈடுபடவுள்ளனர்.