நமது நிருபர்
காலக்கெடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என கேரள, பஞ்சாப் அரசுகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய விவகாரத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, 8-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
அப்போது மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதற்கு ஆதரவாக கேரளம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகளின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் வாதங்களை முன்வைத்தனர்.
அதன் விவரம்: மசோதாக்களை காலவரையின்றி கிடப்பில்போட ஆளுநருக்கு அரசியல் சாசனம் எந்த ஓர் அதிகாரத்தையும் வழங்கவில்லை.
நியாயமான கால வரம்புக்குள் அல்லது குறுகிய காலத்துக்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க வேண்டும்.
அரசியல் சாசனப் பிரிவு 143-இன் கீழ் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரிய குடியரசுத் தலைவரின் முடிவு என்பது தன்னிச்சையாகவோ, தனது விருப்புரிமையின்படியோ எடுத்தது அல்ல. ஏனெனில், தன்னிச்சையாக விளக்கம் கேட்க குடியரசுத் தலைவருக்கு அரசமைப்பில் அதிகாரம் வழங்கப்படவில்லை.
எனவே, குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியது என்பது மத்திய அமைச்சரவை மற்றும் அதன் தலைவரான பிரதமரின் ஆலோசனையின்படிதான்.
எனவே, குடியரசுத் தலைவரின் விருப்புரிமை உள்ளது என்ற பேச்சுக்கே இட மில்லை.
மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை குடியரசுத் தலைவர் ரத்து செய்ய முடியாது. அவ்வாறு மீற முடியும் எனக் கருதுவது சரியானது அல்ல. எனவே, மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது குறித்து குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த வாதங்கள் புதன்கிழமையும் தொடரும் என நீதிபதிகள் குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.