சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசாம் கான் 23 மாதங்களுக்குப் பின் சீதாபூர் சிறையிலிருந்து ஜாமீனில் இன்று (செப். 23) விடுதலை செய்யப்பட்டார்.
கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரை சிறைக்கு வெளியே வரவேற்றனர். மேலும், ஆசாம் கானின் விடுதலையையொட்டி அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் சிறைக்கு வெளியே கூடியதால், சீதாபூர் போலீஸார் ட்ரோன்கள் மூலம் அவர்களைக் கண்காணித்தனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசாம் கான், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சருமாவார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு சாஜ்லெட் காவல் நிலையம் அருகே சாலை மறியல் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக அவர்மீது வழக்குப் பதியப்பட்டது. அதன்பின்னர் அவர் மீது பல்வேறு வழக்குகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அசாம் கான் 2022 இல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அக்டோபர் 2023 இல் அவர் மீது பதிவு செய்யப்பட்ட புதிய வழக்கைத் தொடர்ந்து, அவர் ராம்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து சீதாபூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து ஆசாம் கானின் வழக்குரைஞர் ஜுபைர் அகமது கான் கூறுகையில்,
ஆசாம் கான் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்றுள்ளதாகவும், சீதாபூர் மாவட்ட சிறைச்சாலையால் விடுதலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
போலீஸாரின் பதிவுகளின்படி, ஆசாம் கான் மீது 111 குற்றவியல் வழக்குகள் உள்ளன. இவற்றில், 7 வழக்குகளில் இறுதி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, ஒரு வழக்கு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டது. மேலும் 9 வழக்குகள் சமாஜ்வாதி அரசால் திரும்பப் பெறப்பட்டன. அவருக்கு 6 வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் இப்போது அனைத்து வழக்குகளிலிருந்தும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளன என்று அவர் கூறினார்.
கூடுதலாக மூன்று வழக்குகள் தொடர்பான வழக்கை ராம்பூரில் உள்ள எம்.பி/எம்.எல்.ஏ நீதிமன்றம் அக்டோபர் 1 ஆம் தேதி விசாரிக்கும் என்றும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.