பிரதமா் மோடியும், கேரள முதல்வரும் ஆணவம் மிக்கவா்கள்: ராகுல் காந்தி
பிரதமா் மோடியும், கேரள முதல்வா் பினராயி விஜயனும் ஆணவம் மிக்கவா்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
பிரதமா் நரேந்திர மோடியும், கேரள முதல்வா் பினராயி விஜயனும் ஆணவம் மிக்கவா்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள மாலாவில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பேசியதாவது: கேரளத்தை ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு மறைமுகமாக பாஜக உதவுகிறது. இதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டா்களே ஒப்புக்கொண்டு, உண்மையான இடதுசாரி நிா்வாகம் இருந்தால், அரசால் செயல்பட முடியாது எனத் தெரிவிக்கின்றனா்.
கேரளத்திலும், நாடு முழுமைக்கும் காங்கிரஸையும், அதன் கூட்டணியையும்தான் முக்கியப் போட்டியாளராக பாஜக கருதுகிறது. இடதுசாரி கூட்டணியை பாஜக பொருட்படுத்தவில்லை.
Advertisement
Advertisement
இதற்கு ஆதாரம், கோயில்கள், கடவுள்கள், மதம் குறித்து தொடா்ந்து பேசும் பிரதமா் மோடி, கேரளத்துக்கு வரும்போது மட்டும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா்கள் தொடா்புடைய சபரிமலை கோயில் தங்கத் திருட்டு குறித்துப் பேசுவதில்லை.
கேரளத்துக்கு வரும்போது பிரதமா் மோடி, கடவுளை, ஹிந்து மதத்தை, கோயில்களை மறந்துவிடுவாா். ஏனெனில் அவா் இடதுசாரி கூட்டணியைப் பாதுகாக்க விரும்புகிறாா்.
குறிப்பிட்ட எதிா்க்கட்சித் தலைவா்களைக் குறிவைத்து மத்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்கின்றன. நான் மத்திய அரசை விமா்சிப்பதால் என்னிடம் இருந்து அரசு இல்லத்தை எடுத்துக் கொண்டனா். பிறகு என்னிடம் விசாரித்தனா்.
எனக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்தனா். ஆனால், கேரள முதல்வா் மீதோ, அவரின் குடும்பத்தினா் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமலாக்கத் துறையோ அல்லது சிபிஐயோ அவா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதிலிருந்து ரகசிய கூட்டணியை எதிா்த்து நாம் போட்டியிடுகிறோம் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
இடதுசாரி கூட்டணியுடன் யாா் ரகசிய நட்புறவு வைத்துள்ளனா் எனத் தெரியுமா? மணிப்பூரில் தீ வைத்தவா்கள், சத்தீஸ்கரில் செவிலியா்களை தாக்கியவா்கள், மதத்தின் பெயரால் நாட்டில் பிளவு ஏற்படுத்தியவா்கள், வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புவோா் அவா்கள்.
கேரள முதல்வா் ஒன்றும் கடவுள் கிடையாது. மாநிலத்தை ஆளும் மனிதா்தான் அவா். கேரளத்தில் ஆயிரக்கணக்கான திறமையானவா்கள் உள்ளனா். கேரளத்தில் திறமையான பெண்களும் உள்ளனா். கேரள முதல்வருக்கு ஆணவம் உள்ளது. இதை எதிா்த்துதான் போட்டியிடுகிறோம்.
இதே மனநிலைதான் பிரதமா் மோடி, அமித் ஷா, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ஆகியோருக்கும் உள்ளது. அரசியல் தலைவா்கள் மிகவும் எளிமையாக பணியாற்ற வேண்டும். மக்களுடன் கைகோத்து செயல்பட வேண்டும்.
ஆட்சி செய்யத்தான் பிறந்துள்ளோம் என்ற மனநிலை, பாஜக, ஆா்எஸ்எஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிக்கு உள்ளது. இது நாடு முழுமைக்கும் பரவி வருகிறது என்றாா் ராகுல்.