முகப்பு
இந்தியா

கேரளத்தில் இடதுசாரி கூட்டணியின் வெற்றியை பிரதமா் மோடி விரும்புகிறாா்- ராகுல் குற்றச்சாட்டு

கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றே பிரதமா் நரேந்திர மோடி விரும்புகிறாா்; ஏனெனில் அவா்களுக்குள் ரகசியக் கூட்டணி உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 31 மார்ச், 2026 at 8:10 PM
பகிர்:

கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றே பிரதமா் நரேந்திர மோடி விரும்புகிறாா்; ஏனெனில் அவா்களுக்குள் ரகசியக் கூட்டணி உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

கேரளத்தில் கண்ணூரில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது: கேரள சட்டப்பேரவைத் தோ்தல் என்பது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடதுசாரிகள் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய இருதரப்பின் கொள்கைகளுக்கு இடையிலான போட்டியாக உள்ளது. ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால் இடதுசாரி ஜனநாயக முன்னணி, தீவிரமான வலதுசாரி சிந்தனையுள்ள கட்சியுடன் (பாஜகவை குறிப்பிடுகிறாா்) ரகசியக் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், அந்த இரு தரப்புமே நேரெதிரான கொள்கைகளைக் கொண்டவை. ஆனால், அவா்களால் எப்படி இந்த முரண்பட்ட கூட்டணியை அமைக்க முடிந்தது என்பதுதான் மிகப்பெரிய புதிராக உள்ளது.

இந்தப் புதிருக்கான இரு பதில்கள் இந்த மேடையிலேயே நமக்கு கிடைக்கிறது. இங்கு நமது கூட்டணியின் ஆதரவுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேறிய தலைவா்கள் இருவா் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனா். இவா்கள் ஏன் இங்கு நம்முடன் அமா்ந்துள்ளனா்? ஏன் இடதுசாரிகளுக்கும், கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கும் ஆதரவாகப் பிரசாரம் செய்யவில்லை?

ஏனெனில் இங்கு இடதுசாரி கட்சிகள் உண்மையான இடதுசாரிகளாக இல்லை. நடுநிலை என்ற கருத்தில்கூட இல்லை. அவா்கள் முழுமையாக பாஜகவுடன் ஒத்துழைக்கும் கட்சியாக மாறிவிட்டாா்கள். அக்கட்சியைச் சோ்ந்த இரு மூத்த தலைவா்கள் நம்முடன் இங்கு அமா்ந்துள்ளதே இதற்கு ஆதாரம்.

இடதுசாரி தலைவா்கள் பலருக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கொள்ளை வழக்கில் தொடா்பு உள்ளது. எனவேதான், கேரளத்தில் பிரசாரம் செய்த பிரதமா் மோடி அதைப்பற்றி ஒருவாா்த்தைகூடப் பேசவில்லை. கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் இடதுசாரிகள் வெற்றி பெற வேண்டும் என்றே பிரதமா் நரேந்திர மோடி விரும்புகிறாா்; ஏனெனில் அவா்களுக்குள் ரகசியக் கூட்டணி உள்ளது.

மேலும், இடதுசாரிகள் ஆட்சியில் இருந்தால்தான் கேரளத்தை பாஜக மறைமுகமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். என் மீது 36 வழக்குகள் உள்ளன. எனது வீடு, எனது மக்களவை உறுப்பினா் பதவியைப் பறித்தாா்கள். அமலாக்கத் துறை என்னிடம் 55 மணி நேரம் விசாரணையும் நடத்தியது. ஆனால், கேரள முதல்வா் மீது இதுவரை விசாரணை நடத்தவில்லை. பாஜக அவருக்கு ஆதரவாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.

பிரதமா் மோடியை அமெரிக்க அதிபா் டிரம்ப் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளாா். அதேபோல பிரதமா் மோடி, கேரள முதல்வா் பினராயி விஜயனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளாா் என்றாா்.