மேற்கு வங்கத்தில் பெண் முதல்வருக்கு எதிராக பாஜக பெண் முதல்வர் பிரசாரம்!
மம்தா பானர்ஜி x ரேகா குப்தா... பெண் வாக்காளர்களைக் கவர பிரசாரக் களத்தில் பெண் முதல்வரைக் களமிறக்கிய பாஜக!
கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரக் களம் அனல் பறக்கிறது. அங்கு முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவைச் சேர்ந்த தில்லியின் பெண் முதல்வர் ரேகா குப்தா இன்று(ஏப். 11) பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு இந்த மாதம் 23 மற்றும் 29-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து ரேகா குப்தா தெரிவித்திருப்பதாவது : “இந்த முறை பெண்கள் விரோத மம்தா அரசு வேரறுக்கப்பட்டு பிடுங்கி எறியப்படும் என்பதில் வங்கத்தின் பெண்கள் சக்தி தீர்க்கமாக இருக்கிறது.
இங்குள்ள உள்ளூர் சகோதரிகளைச் சந்தித்துப் பேசினேன். அவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக இந்தக் காட்டுமிராண்டி ஆட்சியில் பெண்களுக்கு எதிரான எண்ணற்ற விரோதச் செயல்களை எடுத்துரைத்தனர். பெண்களுகு எதிரான இத்தகைய கொடுமைகளை வங்கம் சகித்துக்கொள்ளாது. திரிணமூல் காங்கிரஸ் குண்டர்களை நாம் சிறையிலடைப்போம்.
Advertisement
இங்குள்ள ஒவ்வொரு தாய்மாரின் வங்கிக் கணக்குகளிலும் ஒவ்வொரு மாதமும் ரூ. 3,000 செலுத்தப்படும். வங்கத்தில் தாமரை மலரும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ், வங்கத்தில் பெண்கள் அதிகாரமிக்கவர்களாகத் திகழுமொரு புதிய சகாப்தம் தொடங்கும்” என்றார்.
இந்த நாட்டை நிா்வகிப்பதிலும், நிா்வாகத்திலும், கொள்கை வகுப்பதிலும் பெண்கள் மிகப் பெரிய பங்கை ஆற்ற வேண்டும் எனவும் தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்த நிலையில், மற்றொரு பெண் முதல்வரை எதிர்த்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பது கவனிக்கத்தக்கது.