வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது பற்றி...
வாக்குச் சாவடிகளின் பயோ-மெட்ரிக் மூலம் வாக்காளர்களின் அடையாளத்தை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேரளம், அஸ்ஸாம் மற்றும் புதுவை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாட்டில் ஏப். 23 மற்றும் மேற்கு வங்கத்தில் ஏப். 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது, வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களை பயோ-மெட்ரிக் முறையில் அடையாளம் காண உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
Advertisement
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “சில மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், பயோ-மெட்ரிக் முறையை அமல்படுத்துவது நடைமுறைக்கு உகந்ததாக இருக்காது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதற்கு பதிலளித்த மனுதாரர், “தற்போது அத்தகைய நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரவில்லை. மாறாக, இந்த விவகாரத்தை பரிசீலிக்கும் வகையில் எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று மட்டுமே கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ”அடுத்த நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டுமா என்பதை இந்திய தேர்தல் ஆணையமே தீர்மானிக்க வேண்டும். எனவே நோட்டீஸ் அனுப்பப்படுகிறது” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பான நோட்டீஸ் இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.