முகப்பு
தமிழ்நாடு

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் செய்தது மிகப்பெரிய தவறு: உச்ச நீதிமன்றம்

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் செய்தது மிகப்பெரிய தவறு என உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றம் - ANI
பகிர்:

நரம்பியல் மருத்து சுப்பையா, கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை ஆர்.ஏ. புரத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் மிகப்பெரிய தவறை செய்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

நிலப் பிரச்னை தொடா்பாக நரம்பியல் மருத்துவா் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரில் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து 9 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து இன்று பரபரப்பான தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதாவது, சென்னை உயர் நீதிமன்றம், குற்றவாளிகளுக்கான தண்டனையை ரத்து செய்தது மிகப்பெரிய தவறு. விசாரணை நீதிமன்ற உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது சரியல்ல, விசாரணை நீதிமன்றம் முறையாக விசாரித்து அளித்த தீர்ப்பை உரிய முறையில் ஆராயாமல் உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதாக அறிவித்திருக்கும் உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை பிறப்பித்துள்ளதோடு, அனைவரும் உடனடியாக சரணடையவும், பொன்னுசாமி மற்றும் அவரது மனைவி மேரி புஷ்பம் ஆகியோரது வயது முதிர்வைக் கருத்தில் கொண்டு, குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்க கால அவகாசம் வழங்கி இருவரின் தண்டனையை மட்டும் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?

தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சு கிராமம் பகுதியில் பல கோடி மதிப்புள்ள 2.25 ஏக்கா் நிலம் தொடா்பான பிரச்னையில், நரம்பியல் மருத்துவா் சுப்பையா என்பவா் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் 2013-ஆம் ஆண்டு செப்.9-ஆம் தேதி பட்டப்பகலில் கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். கைதானவா்களில் கூலிப்படையைச் சேர்ந்த ஐயப்பன் என்பவா் அப்ரூவராக மாறினாா்.

ஆப்ரூவராக மாறியது ஏன்?

உயிரைக் காப்பாற்றும் மருத்துவரைக் கொன்றது மன உளைச்சலைத் தந்தது. எனவே தாமாக முன்வந்து வாக்குமூலம் அளித்ததாகவும், அப்ரூவராக மாறியதாகவும் ஐயப்பன் கூறியிருந்தார்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மிக முக்கிய பதவிகளிலும், பொறுப்புகளிலும் இருந்த நிலையில், அரசுத் தரப்பு சாட்சியாக மாறிய ஐயப்பனின் வாக்குமூலமே குற்றத்தை நிரூபிக்க பேருதவியாக இருந்து விசாரணை நீதிமன்றத்தில் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை பெற்றத் தர முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

மருத்துவர் சுப்பையாவே வாக்குமூலம் - இதுதான் மிக முக்கிய திருப்புமுனை!

கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட மருத்துவர் சுப்பையா, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாள்களுக்குப் பின் மரணமடைந்தார். மரணமடைவதற்கு முன்பு, காவல்துறையினரிடம் தன் மீதான தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை அவரது வாய்மொழியாகவே தெரிவித்திருந்ததும் இந்த வழக்கில் மிக முக்கிய திருப்புமுனையாக இருந்துள்ளது.

அதாவது, கன்னியாகுமரி மாவட்டம் காணிமடத்தைச் சேர்ந்த பொன்னுசாமி குடும்பத்தினருக்கும் டாக்டர் சுப்பையாவுக்கும் இடையே அஞ்சுகிராமத்தில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சொத்து பிரச்னை இருப்பதும், இப்பிரச்னைத் தொடர்பான வழக்கில் சுப்பையாவுக்கு சாதகமான தீர்ப்பு வந்ததால், ஆத்திரமடைந்த பொன்னுசாமி குடும்பத்தினரே சுப்பையாவை கொலை செய்திருப்பது குறித்தும் அவரே காவல்துறையிடம் தெரிவித்திருந்தது விசாரணைக்கு மிக முக்கிய வழிகாட்டியாக அமைந்திருந்தது.

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசுப் பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, அவரது மகன்களும் வழக்குரைஞர்களாக இருந்தவர்களுமான பாசில், வில்லியம், பொறியாளர் போரிஸ், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமாா், கூலிப்படையைச் சேர்ந்த முருகன், செல்வ பிரகாஷ் ஆகியோருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம், யேசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து 2021, ஆகஸ்டில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், குற்றவாளிகள் அனைவரையும் விடுவிடுத்து உத்தரவிட்டது. இத்தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து, அனைவரும் உடனடியாக சரணடைய உத்தரவிட்டது.

முன்னதாக விசாரணையின்போது, பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பகுதியில் மருத்துவா் ஒருவா் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறாா். அந்த நிகழ்வுகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கின்றன. அனைத்து விசாரணைகளை நடத்தி உரிய ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஆனால், சென்னை உயா்நீதிமன்றம் அவா்கள் அனைவரையும் விடுதலை செய்திருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இது எங்களுக்கு வியப்பை அளிப்பதாக இருக்கிறது என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

The Supreme Court has ruled that the High Court made a huge mistake in the Dr. Subbaiah murder case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments