இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!
தமிழகத்தில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு விவரங்களை கேட்கும் சென்னை உயர் நீதிமன்றம்.
தமிழகத்தில் எத்தனை போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன? இன்னும் எத்தனை நீதிமன்றங்கள் தேவைப்படும்? போக்சோ நீதிமன்றங்களின் செயல்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கும், உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திராவைச் சேர்ந்த 26 வயது பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ் ராஜ் ஆகியோர் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், சட்டப்படி இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்காமல் தாமதிக்கப்படுவதால், தனது வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
Advertisement
Advertisement
அந்த மனுவில், பாலியல் வன்கொடுமை வழக்குகளை சட்டப்படி இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் அமர்வு நீதிமன்றங்களுக்கு உத்தரவிட வேண்டும்; மாநிலம் முழுவதும் எத்தனை பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்த விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முன்னுரிமை கொடுத்து அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், ஆந்திரா பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி இரு போலீஸாரும் தாக்கல் செய்த மனுக்கள் ஜூன் 4 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டு, ஜூன் 17 ஆம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு, 24 ஆம் தேதி முதல் சாட்சி விசாரணை துவங்கப்பட உள்ளது. உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ஜூலை 31 ஆம் தேதிக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தமிழக அரசு தீவிரமாக கருதுகிறது. போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக அரசு, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் நடைமுறைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் எத்தனை போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன? இன்னும் எத்தனை நீதிமன்றங்கள் தேவைப்படும்? போக்சோ நீதிமன்றங்களின் செயல்பாடு குறித்தும், அந்த நீதிமன்றங்களில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கும், உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
The Madras High Court seeks details regarding the infrastructure of POCSO special courts in Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.