மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி
மேற்கு வங்கத்தில் இம்முறை பாஜக ஆட்சி அமையும் என அமித் ஷா பேசியது குறித்து...
மேற்கு வங்கத்தில் மே 5 ஆம் தேதி பாஜகவைச் சேர்ந்தவர் முதல்வராகப் பதவியேற்பார் என்றும் மக்கள் இந்த மாற்றத்தைக் கொண்டுவருவார்கள் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட இன்று (ஏப். 13) தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம் பஸ்சிம் பர்தமான் மற்றும் பிர்பூம் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமித் ஷா இன்று (ஏப். 13) பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மக்களிடம் வாக்கு சேகரித்த பிறகு பிரசார வாகனத்தில் இருந்தவாறு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
Advertisement
ரவீந்திரநாத் தாகூரின் சிந்தனையின்படி பாஜக தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.
எல்லைப் பகுதிகளில் வேலி அமைப்பதற்குத் தேவையான இடத்தை மமதா அரசு தர மறுக்கிறது. வேலை அமைக்க எல்லைப் பாதுகாப்புப் படைக்கு 600 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதனை மமதா தருவதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இதனால், எல்லைகளில் ஊடுருவல்கள் நடக்கின்றன.
அப்படி எல்லை வாயிலாக சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை நாங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றிவிட்டோம். திரிணமூல் ஆட்சியில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளன. ஒருகாலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவின் தொழிற்சாலை மையமாக இருந்த மேற்கு வங்கத்தில் இளைஞர்கள் இன்று வேலையின்றி இருக்கின்றனர்.
மமதா ஆட்சியை வழியனுப்பி வைக்க வேண்டிய நேரம் இது. இம்முறை மே 4 ஆம் தேதி பாஜக வெற்றி பெறும். மே 5 ஆம் தேதி பாஜக முதல்வர் மேற்கு வங்கத்தில் பதவியேற்பார் என அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.