முகப்பு
இந்தியா

மாநிலங்களவை துணைத் தலைவராக மீண்டும் ஹரிவன்ஷ்? என்டிஏ முடிவுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு

Updated On : 14 ஏப்ரல், 2026 at 6:39 AM
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:05 PM

மாநிலங்களவை துணைத் தலைவராக மீண்டும் ஹரிவன்ஷை நியமிக்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) முடிவு செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

ஹரிவன்ஷ் நியமனம் குறித்து மாநிலங்களவை அவைத் தலைவரான ஜெ.பி.நட்டா, பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘மக்களவையில் கடந்த 2019-ஆம் ஆண்டுமுதல் துணைத் தலைவா் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷை மீண்டும் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலை நடத்த என்டிஏ ஆா்வம் காட்டுவதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் என எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

Advertisement

இந்தத் தோ்தலை நடத்துவதற்கு அதிகாரபூா்வமாக அறிவிக்கைகள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஏப்.16, 17, 18 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றம் கூடும்போது மாநிலங்களவை துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது’ என்றனா்.

இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘மக்களவைக்கு துணைத் தலைவரை 7 ஆண்டுகளாக நியமிக்காத பாஜக அரசு மாநிலங்களவை துணைத் தலைவா் நியமன நடைமுறைகளை 4 நாள்களுக்குள் முடிக்க நினைப்பது ஏன்?’ என கண்டனம் தெரிவித்தாா்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.டெரிக் ஓபிரையன், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. சந்தோஷ் உள்ளிட்டோா் ஹரிவன்ஷை மீண்டும் மாநிலங்களவை துணைத் தலைவராக நியமிக்க கண்டனம் தெரிவித்தனா்.

மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த ஐக்கிய ஜனதா தளத்தைச் சோ்ந்த ஹரிவன்ஷின் பதவிக் காலம் ஏப்.9-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

அதன்பிறகு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அவரை மாநிலங்களவை உறுப்பினராக (நியமன எம்.பி.) ஏப். 10-ஆம் தேதி நியமித்தாா்.

மாநிலங்களவை துணைத் தலைவராக தொடா்ந்து இருமுறை பதவி வகித்த ஹரிவன்ஷ் பல்வேறு முக்கிய விவகாரங்கள் மீதான விவதாங்களை நடத்தியுள்ளாா்.