மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு!
மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு செய்யப்பட்டது பற்றி...
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண், மூன்றாவது முறையாக மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிகார் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக 2014, 2020 என இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷ் நாராயண், 2020 முதல் மாநிலங்களவை துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இவரது பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், மீண்டும் மாநிலங்களவைத் தேர்தலில் ஹரிவன்ஷ் நாராயண் போட்டியிடவில்லை.
Advertisement
இந்த நிலையில், ஹரிவன்ஷ் நாராயணை நியமன உறுப்பினராக நியமிக்க, கடந்த வாரம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மாநிலங்களவைக்கு பரிந்துரைத்தார்.
இன்றைய மாநிலங்களவை கூட்டத்தில், ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா முன்மொழிந்தார்.
எதிர்க்கட்சிகள் தரப்பில் போட்டி வேட்பாளர் களமிறக்கப்படாததை அடுத்து, ஹரிவன்ஷ் நாராயண் தொடர்ந்து மூன்றாவது முறையாக மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
இதையடுத்து நாடாளுமன்ற மரபுபடி, அவை முன்னவர் ஜெ.பி. நட்டா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஹரிவன்ஷை அழைத்துச் சென்று இருக்கையில் துணைத் தலைவருக்கான இருக்கையில் அமரவைத்தனர்.
அப்போது ஹரிவன்ஷுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி, மூன்றாவது முறையாக மாநிலங்களவை துணைத் தலைவராக நீங்கள் தேர்வாகியிருப்பது, இந்த அவை உங்கள் மீது வைத்திருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்றார்.