மிசோரமில் மாநிலங்களவை தேர்தல்: முதல்வர் லால்துஹோமா வாக்களித்தார்!
மிசோரமின் ஒரேஒரு மாநிலங்களவை இடத்திற்கான தேர்தலில் நடைபெறும் வாக்குப்பதிவு பற்றி..
மிசோரமின் ஒரே ஒரு மாநிலங்களவை இடத்திற்கான தேர்தலில் இரு வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆளும் கட்சியான சோரம் மக்கள் இயக்கம் செய்தித் தொடர்பாளர் கே. லால்ட்லுவாங்கிமா என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அதேவேளையில், முக்கிய எதிர்க்கட்சியான மிசோரம் தேசிய முன்னணி வழக்குரைஞரும், எழுத்தாளருமான ஜோதான்சங்கி ஹமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளன.
Advertisement
Advertisement
சட்டப்பேரவைத் செயலகத்தின் கூடுதல் செயலாளர் லால்தாங்மாவியா கூறுகையில்,
சட்டப்பேரவை உறுப்பினர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள், மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன. சட்டப்பேரவை கட்டடத்திலேயே வாக்குகள் எண்ணப்படும் என்று அவர் கூறினார்.
முதல்வர் லால்துஹோமா காலை 9.43 மணிக்கு தனது வாக்கைப் பதிவு செய்தார். அப்போது ஆளும் கட்சிக்குள் பிளவு இருப்பதாகவும், அதனால் மாநிலத்தின் ஒரே மாநிலங்களவை இடத்திற்கான தேர்தலில் கட்சிக்கு எதிராக வாக்களித்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார்.
ஆளும் கட்சிக்குள் உட்கட்சி பூசல் இருப்பதும், மாநிலங்களவை தேர்தலில் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புள்ளது என்பதும் பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப எதிர்க்கட்சிகள் செய்யும் ஒரு தந்திரமாகும். அவர்கள் ஆரம்பத்திலிருந்தே இதைச் செய்து வருகின்றனர்.
வாக்குப்பதிவின் போது எங்கள் உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருப்பதால், கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் நிகழ்வு எதுவும் நடக்காது என முதல்வர் கூறினார்.
40 உறுப்பினர்களைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கு சோரம் மக்கள் இயக்கம் கட்சிக்கு 27 உறுப்பினர்களும், மிசோ தேசிய முன்னணி கட்சிக்கு 10 பேரும், பாஜகவுக்கு இருவரும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர்.