முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிதீஷ் குமார் குறித்து...
மாநிலங்களவை எம்.பி.யும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார், பிகார் முதல்வர் பதவியை இன்று(ஏப். 14) ராஜிநாமா செய்தார்.
நிதீஷ் குமார், மாநிலங்களவை எம்.பி.யாக கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றார். மாநிலங்களவைக்கு கடந்த மார்ச் மாதம் தோ்வான நிதீஷ் குமார், பிகார் மாநில சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பதவியை அண்மையில் ராஜிநாமா செய்திருந்தார்.
பிகாரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களுடன் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.
Advertisement
இந்தக் கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் முறையே 89, 85 இடங்களைக் கைப்பற்றின. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததுடன், தொடர்ந்து இரண்டாவது தேர்தலாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட அதிக இடங்களில் வெற்றி கண்டது.
அதேநேரம், மாநில முதல்வராக 10-ஆவது முறையாக நிதீஷ் குமாா் பதவியேற்றார். கடந்த 2005-இல் இருந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக முதல்வராகப் பதவி வகித்துவரும் அவர், பிகாரின் நீண்ட கால முதல்வர் என்ற பெருமைக்குரியவர்.
கடந்த மார்ச் 1-ஆம் தேதி தனது 75-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய நிதீஷ் குமார், அதற்கு அடுத்த ஒரு வாரத்தில் மாநிலங்களவை எம்.பி.யாகும் தனது முடிவை வெளியிட்டு வியப்பை ஏற்படுத்தினார். இதன்மூலம் பாஜக தலைமையிலான மாநில அரசு பதவியேற்க வழி ஏற்படுத்தப்பட்டது.
நிதீஷ் குமார், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், பாஜக சார்பில் பதவியேற்கவிருக்கும் புதிய முதல்வா் யார் என்ற எதிா்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நிதீஷ் குமார் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில்"நான் முதல்வர் பதவியிலிருந்து விலக முன்னதாக முடிவு எடுக்கப்பட்டது. இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, ஆளுநரைச் சந்தித்து என்னுடைய ராஜினாமா கடிதத்தை அவரிடம் வழங்கினேன்.
புதிய அரசாங்கத்திற்கு எனது முழுமையான ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் கிடைக்கும். பிகார் மாநிலம் பெருமளவில் முன்னேற்றம் அடையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.