ஏப். 13ல் பிகார் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்கிறார் நிதீஷ் குமார்?
பிகார் முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜிநாமா செய்வது பற்றி...
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வருகிற ஏப். 13 ஆம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு பிகார் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் கூறியபடியே பிகாரில் இருந்து மாநிலங்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும் பிகாரில் அடுத்த முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படாமல் உள்ளதால் அவர் இன்னும் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவில்லை.
சட்டப்பேரவை, சட்ட மேலவை, மக்களவை என பல்வேறு பதவிகளில் இருந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியிருந்தார்.
மாநிலங்களவை எம்.பி.யாக வருகிற ஏப். 10 ஆம் தேதி அவர் பதவியேற்பார் என்று தெரிகிறது. முன்னதாக தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த நிதீஷ் குமார் வருகிற ஏப். 13 ஆம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிகாரின் அடுத்த முதல்வர் முடிவு செய்யப்பட்டு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் பதவியேற்பு நடக்கலாம் என்று கூறப்படுகிறது.