எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்தார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்!
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்தது பற்றி...
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிகார் முதல்வர் நிதீஷ் குமார், தனது சட்டமேலவை உறுப்பினர் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.
தேசிய அரசியலுக்குச் செல்வதாக அறிவித்த பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதீஷ் குமார், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, பிகார் மாநிலத்தில் புதிய அரசு விரைவில் அமையும் என்றும், புதிய முதல்வருக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் நிதீஷ் குமார் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்பதற்கு முன்னதாக, இன்று காலை தனது சட்டமேலவை உறுப்பினர் பதவியை நிதீஷ் குமார் ராஜிநாமா செய்துள்ளார்.
விரைவில் மாநில ஆளுநரை நேரில் சந்தித்து அமைச்சரவையைக் கலைப்பதற்கான கோரிக்கையை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பாஜக முதல்வா் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் எனத் தெரிகிறது. சமீபத்தில் ஐக்கிய ஜனதா கட்சியில் இணைந்த நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், பிகார் துணை முதல்வராகப் பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவுள்ள நிதீஷ் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.