துணை முதல்வர் பதவி? நிதீஷ் குமாரின் மகன் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைகிறார்!
பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் முதல்முறையாக ஐக்கிய ஜனதா தளத்தில் இணைவது குறித்து...
பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் முதல்முறையாக ஐக்கிய ஜனதா தளத்தில் இணைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகாரில் கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரான நிதீஷ் குமார் 10 ஆவது முறையாக பிகாரின் முதல்வராகப் பதவியேற்றார்.
இந்த நிலையில், நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல்வர் நிதீஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வார் எனக் கூறப்படுகிறது.
இதனால், நீண்டகாலமாக அரசியலில் இருந்து விலகியிருந்த நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் முதல்முறையாக ஐக்கிய ஜனதா தளத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், ஐக்கிய ஜனதா தளத்தில் இணையும் நிஷாந்த் குமாருக்கு பிகாரின் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பிகாரின் புதிய முதல்வராக கூட்டணிக் கட்சியான பாஜகவைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.