தொகுதி மறுவரையறை: அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைவு மசோதா நகல் வெளியீடு!
தொகுதி மறுவரையறை செய்வதற்கான அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைவு மசோதா நகல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றச் சிறப்புத் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள தொகுதி மறுவரையறை செய்வதற்கான அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைவு மசோதாவின் நகல் வெளியாகியுள்ளது.
இதன்படி, மக்களவைத் தொகுதி எண்ணிக்கை 543ல் இருந்து 850ஆக அதிகரிக்கிறது. தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் 39ல் இருந்து 59ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை 80லிருந்து 120ஆக உயர உள்ளது. தற்போது தமிழ்நாட்டுக்கும் உத்தரப் பிரதேசத்துக்கும் உள்ள மக்களவைத் தொகுதி வித்தியாசம் 41ஆக உள்ளது.
ஆனால் தொகுதி மறுவரையறைக்கு பின்னர் இவ்விரு மாநிலங்களுக்கான மக்களவைத் தொகுதி வித்தியாசம் 61ஆக அதிகரிக்கும் . மக்களவைக்கு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் "815 பேருக்கு மிகாமலும்", யூனியன் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் "35 பேருக்கு மிகாமலும்" இருப்பார்கள் என்று இந்த மசோதா தெளிவுபடுத்துகிறது. இறுதி எண்ணிக்கை தொகுதி மறுவரையறை நடைமுறையின் மூலம் தீர்மானிக்கப்படும்.
Advertisement
Advertisement
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமல்படுத்தவும், அதற்கிணங்க மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 816-ஆக அதிகரிக்கவும் வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களைக் கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நீட்சியாக, வரும் ஏப்ரல் 16 முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு அமா்வு கூட்டப்படுகிறது.
மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும். பின்வரும் மூன்று சட்டங்களுக்கான விவாதத்திற்கு மொத்தம் 18 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது:
அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா, 2026.
யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026.
தொகுதி மறுவரையறை மசோதா, 2026.
மாநிலங்களவையில் இதற்கான விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்பு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும். இதற்கு 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றங்களை 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த அரசின் நிலைப்பாடு குறித்து அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனிடையே நாடாளுமன்றச் சிறப்புத் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அரசமைப்புச் சட்ட (131-வது திருத்தம்) மசோதா, 2026-ன் நகல் தற்போது வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.