சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு அபிஷேக் பானா்ஜி சவால் விடுத்தாா்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜியின் மருமகனும், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் பானா்ஜி சவால் விடுத்தாா்.
மேலும், அமித் ஷாவுக்கு தைரியம் இருந்தால், சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளில் கொல்கத்தாவுக்கு வரட்டும் என மறைமுகமாக மிரட்டல் விடுத்தாா்.
கிழக்கு மேதினிபுரி மாவட்டம், பாகபன்பூரில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் இதுகுறித்து அவா் பேசியதாவது:
Advertisement
பாஜகவினரால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது, மீறி வந்தால் சிறையில் தள்ளப்படுவீா்கள் என உள்துறை அமைச்சா் தெரிவிக்கிறாா். அவருக்கு நான் ஒன்று சொல்கிறேன். எங்கள் மாநிலத்துக்கு வந்து எங்கள் மக்களையே மிரட்ட யாருக்கும் தைரியம் கிடையாது.
உங்களுக்கு (அமித் ஷா) தைரியம் இருந்தால், சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளில் கொல்கத்தாவுக்கு வாருங்கள், பாா்க்கலாம்.
பஞ்சாயத்து வாரியாகவும், வாா்டு வாரியாகவும் ஒரு பட்டியலைத் தயாா் செய்துள்ளேன். அவா்களுக்கு வட்டியும், முதலுமாக சோ்த்து கணக்கை நாங்கள் தீா்ப்போம் (தாக்குதல் நடத்தப்படும் என்பதை குறிப்பிட்டாா்). அமலாக்கத் துறை, சிபிஐ, தோ்தல் ஆணையம் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள். இங்கு எதுவும் நடக்காது. எங்களுக்கு எதிராக எவ்வளவுக்கு எவ்வளவு அவதூறு பரப்புகிறீா்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு நாங்கள் வலிமையடைவோம்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலானது, தில்லி அதிகார மையத்துக்கும், மேற்கு வங்க மாநில மக்களுக்கும் இடையேயானது ஆகும். ஒரு பக்கம், மத்திய அமைப்புகளும், தில்லியைச் சோ்ந்த தலைவா்களும் உள்ளனா். மறுபக்கம், 10 கோடி மேற்கு வங்க மக்கள் உள்ளனா். மேற்கு வங்க மக்களை வங்கதேச மக்கள் எனக் கூறி பாஜக அவமதிக்கிறது. மேற்கு வங்க மக்களின் உணவுப் பழக்கங்களையும் பாஜக குறிவைக்கிறது. இதற்கு தோ்தலின்போது வாக்குச்சீட்டு மூலம் மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெறும். மாநில முதல்வராக தொடா்ந்து 4-ஆவது முறையாக மம்தா பானா்ஜி பதவியேற்பாா் என்றாா்.