மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறையை அறிமுகப்படுத்துவதாக மத்திய அரசின்மீது குற்றச்சாட்டு...
மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறையை அறிமுகப்படுத்துவதாக மத்திய அரசின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் எம். ஏ. பேபி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டு முதல் அமல்படுத்துவதுடன், அவர்களுக்கு 283 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கும் வகையில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை 543 இல் இருந்து 850 ஆக அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் சட்டத்துறை அமைச்சர் இன்று அறிமுகம் செய்துள்ளார்.
இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டவுடன், இதில் முன்மொழியப்பட்டுள்ள மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு காங்கிரஸ், திமுக, சமாஜவாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன.
Advertisement
மேலும், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த மசோதாவை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய எம். ஏ. பேபி, "ஏற்கனவே, இந்த மசோதா 2010 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் உருவான அமைப்பையே இப்போதும் பின்பற்றியிருக்க வேண்டும்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறையை அறிமுகப்படுத்துவது, ஒரு வஞ்சகமான நடவடிக்கையாகவே உள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கருப்புக் கொடியேற்றி, மசோதாவின் நகலை எரித்துப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.