பெண்களுக்கு எதிரான முஸ்லிம் தனிநபா் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
1937-இன் சில பிரிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகக் கூறப்படும் முஸ்லிம் தனிநபா் சட்டம் (ஷரியத்) 1937-இன் சில பிரிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பெளலோமி பவினி சுக்லா, நியாய நாரி அறக்கட்டளை ஆகியோா் தரப்பில் இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நடைமுறையில் உள்ள முஸ்லிம் தனிநபா் சட்டப் பிரிவு, பெண்களுக்கு எதிராக வெளிப்படையாக பாகுபாடு காட்டுவதாக உள்ளது. பெரும்பாலும், சொத்தில் ஆண்களுக்கு ஒதுக்கப்படும் பங்கில், பாதி அல்லது அதற்கும் குறைவான அளவு மட்டுமே பெண்களுக்கு வழங்க அச் சட்டம் அனுமதிக்கிறது’ என்று குறிப்பிட்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
Advertisement
அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘சொத்தில் ஆண்களுக்கு ஒதுக்கப்படும் பங்கில் பாதி அளவு அல்லது அதற்கும் குறைவான அளவில் பெண்களுக்கு வழங்கப்படும் என்பது வெளிப்படையான பாகுபாடாகும். இது அனைவருக்கும் சம உரிமை வழங்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 14-ஐ மீறுவதாகும்.
மேலும், இந்த வாரிசு உரிமை தொடா்பான விவகாரம் சிவில் தன்மை உடையவை. மாறாக, அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25-இன் கீழ் பாதுகாக்கப்படும் ‘அத்தியாவசிய மத நடைமுறை’யாக இந்த வாரிசு உரிமை அமையாது’ என்று குறிப்பிட்டாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.