தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா
தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது, தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்?என்பது குறித்து மக்களவையில் அமித் ஷா விளக்கம்..
புது தில்லி: மக்களவைத் தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று பேசினார்.
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850-ஆக உயா்த்தும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடந்து வருகிறது.
இந்த விவாதத்தின் மீது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவைத் தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாது. அதுபோல தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையாது, எந்த பாதிப்பும் ஏற்படாது.
Advertisement
அதாவது, 543 பேரைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்களின் எண்ணிக்கை 39. இது 7.18 சதவிகிதம் ஆகும். எனவே, 850 பேரைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் மக்களவை தொகுதிகள் 59 ஆக அதிகரிக்கும். இதுவும் 7.23 சதவிகிதம்தான். எனவே தமிழகத்துக்கு எந்த நஷ்டமுமில்லை.
ஏற்கனவே, தமிழகத்தில் தொகுதி மறுவறையறை நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புச் சட்டை போட்டு போராட்டங்கள் தொடங்கப்பட்டுவிட்டன. அதற்காகவே இன்று இங்கு பேசியிருக்கிறேன். தொகுதி மறுவரையறை குறித்து பரவி வரும் தவறான கருத்துகளுக்கு நான் நாளை விளக்கமளிக்கிறேன்.
அதுபோல, தமிழ்நாடு, மேற்கு வங்கத் தேர்தல் நேரத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பது ஏன் என்றும் கேள்விகள் எழுகின்றன. இப்போது செயல்பட்டால்தான், 2029 மக்களவைத் தேர்தலின்போது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அமலாகும் என்பதால்தான் துரிதமாக செயல்படுகிறோம் என்றார்.
அதுபோல, தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் தொகுதி மறுவரையறை மசோதா, முந்தைய அரசுகள் கொண்டுவந்த மசோதாவைப் போன்றதே என்று அமித் ஷா விளக்கம் கொடுத்துள்ளார்.