காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!
எம்பிக்களின் கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்...
திமுக எம்பிக்கள் கருப்பு உடை அணிந்து சென்றதை விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிலளித்துள்ளார்.
மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா உள்ளிட்டவை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றன.
நேற்று விவாதத்தின் மீது பிரதமர் மோடி பேசுகையில், தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடை அணிந்திருந்த திமுக எம்பிக்களை விமர்சித்திருந்தார்.
Advertisement
இந்த நிலையில், பிரதமரின் விமர்சனத்துக்கு மக்களவையில் பதிலளித்து கனிமொழி இன்று பேசியதாவது:
”ஹிந்துத்துவத்தை பாதுகாக்க இங்கே அமர்ந்திருப்பவர்களுக்கு காளி கறுப்பு நிறம் என்பது நினைவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பெண் சக்தியைப் பறைசாற்றும் காளியும் கருப்பு நிற உடைதான் அணிந்துள்ளார். ஒருவரின் ஆணவம், அராஜகம் அழிக்கும் தன்மை கொண்டவர். அந்த கருப்பு நிறத்தை தேர்ந்தெடுத்து நாங்கள் போராட்டம் செய்கிறோம். ஏனெனில் அது பெரியாரின் நிறம்.
சுயமரியாதை, தலை குணியக் கூடாது, கடைசி வரை போராடு என்ற குணத்தை கற்றுக் கொடுத்தவர் பெரியார். கடைசி வரை நாங்கள் போராடுவோம்” எனத் தெரிவித்தார்.
மேலும், நேற்று மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு பேசுகையில், “தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருப்புக் கொடியேற்றி போராட்டம் நடத்தினார்” எனக் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, “கருப்புக் கொடியோ, நீலக் கொடியோ எதை ஏற்றினால் என்ன?” என்று விமர்சித்திருந்தார்.
அதனையும் குறிப்பிட்டு பேசிய கனிமொழி, “கருப்புக் கொடி என்பது போராட்டத்தின் அடையாளம். நாங்கள் எதிர்த்து நின்று, போராடுவோம் என்பதற்கான அடையாளம். நீலக் கொடி என்பது அம்பேத்கர் அவரது கட்சிக்காக தேர்வு செய்தது என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அதைதான் நீங்கள் நிராகரித்தீர்கள். அம்பேத்கர் உருவாகிய அரசியலமைப்புச் சட்டத்தை நீங்கள் சீர்குலைக்க நினைக்கிறீர்கள். நாங்கள் பாதுகாக்க முயற்சிக்கிறோம்.” என்றார்.
கனிமொழி பேசுகையில் திமுக எம்பிக்கள் வாழ்க பெரியார் எனக் கோஷமிட்டனர்.