ஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழி
திமுக மீதான முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு கனிமொழி எம்.பி., பதில்...
ஆட்சிக்கு வந்த பிறகும் முதல்வர் சி. ஜோசப் விஜய், திமுகவை குறை சொல்லிக்கொண்டு இருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி இன்று (ஜூன் 1) விமர்சித்தார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் திமுக எம்.எல்.ஏ. அலுவலகத்தை கனிமொழி இன்று திறந்துவைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் கனிமொழி பேசியபோது, முதல்வர் விஜய்யின் திருச்சி பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
Advertisement
Advertisement
இதற்கு பதில் அளித்த கனிமொழி, ஆட்சி அமைத்த பிறகும் திமுகவை குறை கூறிக்கொண்டு இருக்கிறார் முதல்வர் விஜய். தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியாக உள்ளதா? என்ற கேள்வியை முதல்வர் விஜய்யிடம்தான் கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சிக்கு பயணம் மேற்கொண்டு, வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி ஜோசப் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் விஜய்,
''தவெக ஆட்சி அமைத்துவிடக் கூடாது என திமுகவும் மற்றும் பலரும் சேர்ந்து என்னென்ன வேலைகள் செய்தார்கள் என்பதை அந்த 5 நாள்களில் பார்த்திருப்போம்.
பதவிபோன சோகத்தில் அறிக்கையாக விட்டுத்தள்ளுகிறார் மு.க. ஸ்டாலின். திமுக மாடல் அரசில் ஒரு தெருவிடாமல் போதைப்பொருள் கலாசாரம் கொட்டிக்கிடக்கிறது. இதை முன்பே தடுத்திருந்தால், பெண்களுக்கு அநீதி நடந்திருக்குமா?
அண்ணா ஆரம்பித்த கட்சியை அடிமை கட்சியாக்கிவிட்டு, உடன்பிறப்பே வெளியே வா? என்று கூறுகிறார் மு.க. ஸ்டாலின். திமுக தோல்விக்கு வெளியே காரணம் தேடாதீர்கள். உங்கள் வீட்டில் தேடுங்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்களே திமுக தோல்விக்கு காரணம் என்று உங்கள் தொண்டர்கள் கூறுகின்றனர்.
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு மக்கள் மனதை வெல்ல பார்க்க வேண்டும். அதை விடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கக் கூடாது'' என விஜய் பேசியிருந்தார்.
TVK CM Joseph Vijay continues to criticize the DMK even after they have come to power Kanimozhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.