இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை!
அலாகாபாத் உயர்நீதிமன்ற லக்னௌ அமர்வு உத்தரவு...
லக்னௌ : ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை விதித்து அலாகாபாத் உயர்நீதிமன்ற லக்னௌ அமர்வு உத்தரவிட்டது.
கர்நாடகத்தைச் சேர்ந்த் பாஜக நிர்வாகி எஸ். விக்னேஷ் ஷிஷிர் என்பவர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமையையும் பெற்றுள்ளதாக ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு சுமத்தி இவ்விவகாரத்தில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரிக்க அலாகாபாத் உயர்நீதிமன்ற லக்னௌ அமர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
பாஜக தரப்பு மனுதாரரின் இந்த மனு ஏற்கெனவே கீழமை நீதிமன்றத்தால் கடந்த ஜனவரியில் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் உயர்நீதிமன்றத்தில் தன் தரப்பு வாதத்தை ஏற்க தக்க ஆதாரங்களுடன் சமர்ப்பித்து மேல்முறையீடு செய்துள்ளார்.
Advertisement
இந்நிலையில், அலாகாபாத் உயர்நீதிமன்ற லக்னௌ அமர்வில் நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையில் ராகுல் காந்தி தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டியிருப்பதால் இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை இம்மாதம் 20-ஆம் தேதி, வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்திருப்பதுடன், அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிய ஏற்கெனவே கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 17) பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது.