சிபிஎஸ்இ விவகாரம்! கல்வி அமைச்சரை பிரதமர் நீக்கியிருக்க வேண்டும்: ராகுல்
ஓஎஸ்எம் குளறுபடிகள் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பணிநீக்கம் செய்திருக்க வேண்டும் என ராகுல் பேச்சு
12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திரையில் மதிப்பீடு செய்யும் முறையில் (ஓஎஸ்எம்) ஏற்பட்டுள்ள குளறுபடிகள் விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சரை பிரதமர் நீக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு கணினி வழியாக திரையில் மதிப்பிடும் (ஓஎஸ்எம்) முறை தொடா்பான ஒப்பந்தம் மோசடி நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இருப்பினும், ராகுலின் குற்றச்சாட்டை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மறுத்தது.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது, இந்த விவகாரம் குறித்து சிபிஎஸ்இ தெளிவுபடுத்தியுள்ளது. இதில் முறைகேடுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் யாரும் காப்பாற்ற மாட்டார்கள்.
Advertisement
Advertisement
ராகுல் காந்தியை பொருத்தவரையில், தொடர் தோல்விகளைச் சந்தித்ததால், அவர் விரக்தியில் உள்ளதாகத் தெரிகிறது. எஸ்ஐஆர், மின்னணு வாக்கு இயந்திரம், டிஜிட்டல் இந்தியாவையும் அவர் எதிர்த்தார். இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்துடன் ராகுல் முன்நிற்கவில்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு பதிலளித்த ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, என்னை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் (தர்மேந்திர பிரதான்) தாக்கலாம். ஆனால், அதன் மூலம் உங்கள் குற்றங்கள் சரியாகாது. 18.5 லட்சம் குழந்தைகளின் பதில்களைக் கேட்பதிலிருந்து என்னைத் தடுக்காது.
ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கியுள்ள கோயெம்ப்ட் நிறுவனத்திடம் ஓஎஸ்எம் ஒப்பந்தம் ஏன் வழங்கப்பட்டது? ஏன் பின்னணிச் சரிபார்ப்புகள் நடத்தப்படவில்லை? கோயெம்ப்ட் நிர்வாகத்துக்கும் மோடி அரசுக்கும் என்ன தொடர்பு?
ஒன்று, சரிபார்ப்புச் சோதனையை நடத்தியும் நீங்கள் பணிகளைத் தொடர்ந்துள்ளீர்கள் அல்லது நீங்கள் சோதனையே மேற்கொள்ளவில்லை. எப்படியேனும், நீங்கள் உடந்தையாகத்தான் இருந்துள்ளீர்கள்.
ஒருவேளை பிரதமர் அக்கறை கொண்டிருந்தால், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை அழித்ததற்காக உங்களை அவர் பணிநீக்கம் செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.