பிரதமர் மோடியை மாரீசனுடன் ஒப்பிடுவதா?: தெலங்கானா முதல்வருக்கு பாஜக கண்டனம்!
பிரதமர் மோடியை மாரீசனுடன் ஒப்பிடுவதா?: தெலங்கானா முதல்வருக்கு பாஜக கண்டனம்!
பிரதமர் நரேந்திர மோடியை ராமாயண கால அரக்கன் மாரீசனுடன் ஒப்பிட்டு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்த கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
ரேவந்த் ரெட்டி, சனிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் "வரும் 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனது நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்காக மகளிர் இடஒதுக்கீட்டுக்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு தீவிரமாக முயன்றது.
ராமாயண காலத்தில் சீதையைக் கடத்திச் செல்வதற்கு அரக்கனான மாரீசன் வந்தான். அதேபோன்று தற்போது அரசமைப்புச் சட்டத்தை கடத்திச் செல்ல மோடியும் பாஜக தலைமையிலான ஒட்டுமொத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியும் முயல்கின்றன. அப்படிப்பட்ட எந்த முயற்சியையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று தெரிவித்தார்.
Advertisement
இந்நிலையில், ரேவந்த் ரெட்டியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா, எக்ஸ் வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெறுப்பைப் பரப்புகிறார். மோடியை இகழ்வதன் மூலம் பிரதமர் எனப்படும் அரசியல்சாசனப் பதவியை அவர் அவமதிக்கிறார்.
பிரதமரை ஓர் அரக்கனுடன் ரேவந்த் ரெட்டி ஒப்பிடுகிறார். பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் 150 முறை வசைபாடியுள்ளது. பெண்கள் சக்தியை அவர் வலியுறுத்துவதால் அவரை காங்கிரஸ் வசை பாடுகிறது. இது தற்செயலாக நடக்கும் நிகழ்வு அல்ல; மாறாக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் செயலாகும்.
காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையம், நீதித்துறை ஆகியவற்றையும் வசைபாடுகின்றனர். குடியரசுத் தலைவரையும் அவர்கள் விட்டுவைக்காமல் தரக்குறைவாக விமர்சித்தனர். முப்படைகள், சநாதன தர்மம், அரசியல்சாசனப் பதவிகள் ஆகியவற்றையும் காங்கிரஸார் தரம்தாழ்ந்து விமர்சித்தனர்.
காங்கிரஸ் கட்சி என்பது அன்புக்கான கடை அல்ல. வெறுப்பு என்பது காங்கிரஸின் அடையாளமாக மாறியுள்ளது என்று ஷெசாத் பூனாவாலா தனது பதிவில் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியல்சாசனத் திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் அண்மையில் அறிமுகம் செய்தது. எனினும், அரசுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தால் மக்களவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அந்த மசோதா தோல்வியடைந்தது.