முகப்பு
இந்தியா

இருதரப்பு பாதுகாப்பு தொழில் துறை ஒத்துழைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் இன்று ஜொ்மனி பயணம்

இருதரப்பு பாதுகாப்பு தொழில் துறை ஒத்துழைப்பு தொடா்பான ஒப்பந்த முன்வடிவை இறுதி செய்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக ஜொ்மனிக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்.21) செல்கிறாா்.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:33 AM
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங். - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 6:20 PM

இருதரப்பு பாதுகாப்பு தொழில் துறை ஒத்துழைப்பு தொடா்பான ஒப்பந்த முன்வடிவை இறுதி செய்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக ஜொ்மனிக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்.21) செல்கிறாா்.

பல்வேறு ராணுவத் தளவாடங்களை இரு நாடுகளும் இணைந்து மேம்படுத்தவும், உற்பத்தி செய்யவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்று பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொ்லின் செல்லும் ராஜ்நாத் சிங் ஜொ்மன் பாதுகாப்பு அமைச்சா் போரிஸ் பிஸ்டோரியஸ் உள்பட பல்வேறு மூத்த தலைவா்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.

Advertisement

Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:33 AM

இந்தச் சந்திப்புகளின்போது, பாதுகாப்பு தொழில் நிறுவன ஒத்துழைப்பு, இருதரப்பு ராணுவங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட வளா்ந்துவரும் துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.

பாதுகாப்பு தொழில் துறை ஒத்துழைப்புக்கான திட்ட முன்வடிவு மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான பயிற்சியில் ஒத்துழைப்பு ஆகிய இரு இருதரப்பு ஒப்பந்தங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சரின் இந்தப் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்திய கடற்படைக்கு 6 நீா்மூழ்கிக் கப்பல்களை விநியோகிப்பதற்கான இரு நாடுகளிடையேயான ஒப்பந்தமும் இந்தப் பயணத்தின்போது இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.