பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா
பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள கோர்க்கா பிரச்னைக்கு தீர்வு காணப்படும்..
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால், பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள கோர்க்கா பிரச்னையை ஆறு மாதங்களுக்குள் தீர்வு காணப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவிததார்.
டார்ஜிலிங் மாவட்டத்தில் குரிசியோங்கில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். கோர்க்கா மக்களின் கவலைகளையும் விருப்பங்களையும் பாஜக நன்கு புரிந்துகொண்டுள்ளதாகவும், அவர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு தீர்வை எட்டப் பாடுபடும்.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்த ஆறு மாதங்களுக்குள், ஒவ்வொரு கோர்க்கா மக்களுடைய முகத்திலும் புன்னகை தவழும். கோர்க்கா மக்கள் அமைதியுடன் வாழும் வகையிலான தீர்வை நாங்கள் கண்டறிவோம்.
Advertisement
டார்ஜிலிங் மலைப்பகுதி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள் உண்மையான அக்கறையுடன் செயல்படத் தவறியதே, இப்பிரச்னை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தீடித்து வருவதற்கு முக்கியக் காரணம்.
காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள், டார்ஜிலிங் பகுதிக்கு மட்டுமல்லாமல், நமது தேசபக்தி மிக்க கோர்க்கா சகோதரர்களுக்கு அநீதி இழைத்துள்ளன. இப்பிரச்னையைத் தீர்க்க பாஜக பலமுறை முயற்சி செய்தது. இதுதொடர்பாக மூன்று முறை கூட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால் மமதா தலைமையிலா மாநில அரசு சார்பில் எந்தப் பிரதிநிதியும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்து, கோர்க்கா மக்களின் விருப்பங்களுக்கிணங்க இந்தப் பிரச்னையை ஆறு மாதங்களுக்குள் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எஸ்ஐஆர் திருத்தப் பணியின்போது, கோர்க்கா மக்களின் சில பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும், நீக்கப்பட்ட அனைத்துப் பெயர்களும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
மேற்கு வங்கத்தின் டார்ஜிலங் மலைப்பகுதியில் நேபாள மொழி பேசும் மக்கள் தங்களுக்காக கோரக்காலாந்து என்ற தனிமாநிலம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2011 ஆம் ஆண்டு கோரக்காலாந்து பகுதியளவு தன்னாட்சி பிராந்தியம் அறிவிக்கப்பட்ட பிறகு வன்முறை தணிந்தது.