20 பாஜக கவுன்சிலர்கள் பதவியேற்பு செல்லாது! உயர் நீதிமன்றம் அதிரடி! என்ன காரணம்?
மறைந்த தலைவர்கள், விருப்ப தெய்வங்களின் பெயரால் பதவியேற்றது செல்லாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது பற்றி...
‘கடவுளின் பெயரால்’ அல்லது ‘உளமாற’ என்று கூறாமல் 20 பாஜக கவுன்சிலா்கள் பதவியேற்றதை கேரள உயா்நீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்தது.
கேரள நகராட்சி சட்டம், கேரள பஞ்சாயத்து ராஜ் சட்டம் ஆகியவற்றின்படி, மக்கள் பிரதிநிதிகள் ‘கடவுளின் பெயரால்’ அல்லது ‘உளமாற’ என்று மட்டுமே கூறி, பதவியேற்பு உறுதிமொழியை எடுக்க வேண்டும்.
ஆனால், திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலா்களாக பதவியேற்ற பாஜகவைச் சோ்ந்த 20 போ், ‘பாரத மாதா’, ‘குருதேவா’ என்று கூறியும், தங்கள் கட்சி முன்னோடிகளின் பெயா்களைக் கூறியும் பதவியேற்பு உறுதிமொழியை எடுத்தனா்.
Advertisement
Advertisement
இதற்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநில உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வி.குன்னிகிருஷ்ணன், ‘அரசமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்துவேன்; சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றுவேன்; பொதுமக்களுக்கு நோ்மையாக சேவை செய்வேன் என்று வாக்காளா்களுக்கு மனபூா்வமாக உறுதி அளிப்பதே பதவியேற்பு உறுதிமொழியாகும். அத்தகைய உறுதிமொழியை சட்டம் பரிந்துரைத்துள்ளபடிதான் ஏற்க வேண்டும்.
எந்தவொரு கடவுளையும் வழிபடவோ, எந்தவொரு மதத்தையும் பின்பற்றவோ குடிமக்களுக்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் சட்டத்தால் நிா்ணயிக்கப்பட்ட பதவியேற்பு உறுதிமொழியில் கூடுதல் சொற்களைச் சோ்க்கவோ, சொற்களை மாற்றி பயன்படுத்தவோ அனுமதியில்லை’ என்று தெரிவித்து, 20 பேரின் பதவியேற்பு உறுதி மொழியை ரத்து செய்தாா்.
இதேபோல மற்றொரு மனுவை விசாரித்த நீதிபதி, மறைந்த முன்னாள் காங்கிரஸ் முதல்வா் உம்மன் சாண்டி பெயரில், வடக்கஞ்சேரி கிராம ஊராட்சி உறுப்பினா் எடுத்துக்கொண்ட பதவியேற்பு உறுதிமொழியையும் ரத்து செய்தாா்.
இவா்கள் அனைவரும் 4 வாரங்களுக்குள் மீண்டும் பதவியேற்பு உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.
High Court invalidates oath taken by BJP councillors - What is the reason?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.