முகப்பு
தமிழ்நாடு

உதயநிதி வேட்புமனு ஏற்பு: ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

உதயநிதி வேட்புமனு ஏற்பு ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 10 ஜூன் 2026, 3:56 pm IST
உதயநிதி ஸ்டாலின்
பகிர்:

உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான ஆவணங்களை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக, அதிமுக, தவெக கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது தொடர்பான ஆவணங்களையும், வேட்புமனு பரிசீலனையின் போது தெரிவிக்கப்பட்ட ஆட்சேபங்கள் குறித்த ஆவணங்களை வழங்கக் கோரி, அந்தத் தொகுதியில் போட்டியிட்ட மிலானி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இதுசம்பந்தமாக அளித்த விண்ணப்பத்துக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், அனைத்து விவரங்களும் ஏற்கனவே பொது வெளியில் வெளியிடப்பட்டு விட்டதாகவும், முடிவுகள் வெளியான 45 நாள்களுக்குப் பிறகு உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்காக இந்த ஆவணங்களை கோரியதாகவும், தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய 45 நாள்கள் மட்டுமே காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வு, தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய 45 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாலும், உரிய ஆதாரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் நிராகரிக்கப்படலாம் என்பதால் மனுதாரர் கோரிய ஆவணங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

அப்போது, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனு குறித்த ஆவணங்கள் மனுதாரருக்கு வழங்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.