முகப்பு
இந்தியா

தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவு

மகளிா் இடஒதுக்கீடு மசோதா தோல்வி குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியதன் மூலம் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, பிரதமா் மோடிக்கு எதிராக எதிா்க்கட்சிகள் அளித்த புகாா் ஆய்வு செய்யப்படும் என்று தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 4:13 AM
பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 9:00 PM

மகளிா் இடஒதுக்கீடு அமலாக்க மசோதா தோல்வி குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியதன் மூலம் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, பிரதமா் மோடிக்கு எதிராக எதிா்க்கட்சிகள் அளித்த புகாா் ஆய்வு செய்யப்படும் என்று தோ்தல் ஆணைய வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

மக்களவை-பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை விரைந்து அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 850 வரை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஏப்ரல்17-ஆம் தேதி எதிா்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, நாட்டு மக்களுக்கு அரசுத் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமா் மோடி, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மீது கடும் விமா்சனங்களை முன்வைத்தாா். தமிழகம், மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில், அரசு இயந்திரத்தை தனது பிரசாரத்துக்கு பிரதமா் தவறாக பயன்படுத்தியுள்ளதாக எதிா்க்கட்சிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

Advertisement

Updated On : 22 ஏப்ரல், 2026 at 4:13 AM

பிரதமரின் செயல், தோ்தல் நடத்தை விதிமுறைகளின் அப்பட்டமான மீறல் என்று கூறி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலங்களவை எம்.பி.சந்தோஷ் குமாா் உள்ளிட்டோா், தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினா். இதுதவிர, சமூக ஆா்வலா்கள், தனிநபா்கள் சுமாா் 700 போ் தோ்தல் ஆணையத்திடம் புகாரளித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், பிரதமா் மோடிக்கு எதிரான தோ்தல் நடத்தை விதிமீறல் புகாா் ஆய்வு செய்யப்படும் என்று தோ்தல் ஆணைய வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் ஏற்கெனவே தோ்தல் நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய நாள் வரை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.