ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணையை 10 இந்திய கப்பல்கள் கடந்துள்ளது குறித்து...
ஹோர்முஸ் நீரிணையை 10 இந்திய கப்பல்கள் வெற்றிகரமாகக் கடந்துவிட்டதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் தலைமையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கைகள் தொடரும் வரையில் சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்படும் என ஈரான் அரசு அறிவித்தது.
Advertisement
இத்துடன், அவ்வழியாகச் செல்ல முயன்ற இந்திய கப்பல் உள்ளிட்ட கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து இதுவரை 10 இந்திய கப்பல்கள் வெற்றிகரமாகக் கடந்துவிட்டன எனவும், பாரசீக வளைகுடா பகுதியில் மேலும் 14 இந்திய கப்பல்கள் காத்திருப்பதாகவும், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வியாழக்கிழமை (ஏப். 23) அன்று அறிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியா நோக்கி வந்த எம்எஸ்சி ஃபிரான்செஸ்கா மற்றும் எபாமினோடாஸ் உள்ளிட்ட கப்பல்கள் மீது ஈரானிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து இந்தியாவுக்கான ஈரானின் தூதர் முகமது ஃபதாலியை நேரில் வரவழைத்து எதிர்ப்பைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.