ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையையும் களமிறக்கி பாஜக பிரசாரம் செய்தும் பலனளிக்காது! - மமதா
19 மாநில முதல்வர்களும் ஒரே மாநிலத்தில் ஒரு கட்சிக்கு எதிராகப் பிரசாரம் - மமதா
கொல்கத்தா : ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையும் 19 மாநில முதல்வர்களும் ஒரே மாநிலத்தில் ஒரு கட்சிக்கு எதிராகப் பிரசாரத்தில் ஈடுபட்டும் அதனால் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசினார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்டமாக வரும் ஏப். 29-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, கொளுத்தும் வெய்யிலிலும் பிரசாரம் அனல் பறக்கிறது. அந்த வகையில், ஹூக்ளி மாவட்டத்தில் உத்தர்பாறா பகுதியில் இன்று(ஏப். 25) நடைபெற்ற பிரசாரத்தில் மமதா பேசியதாவது :
“மேற்கு வங்கத்தை நோக்கி 50 ஹெலிகாப்டர்கள் பறக்கின்றன; பிரதமர் தொடங்கி உள்துறை, ரயில்வே, பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் வரை ஏறத்தாழ ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களில் 19 மாநில முதல்வர்களும் ஒரே மாநிலத்தில், அதாவது மேற்கு வங்கத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
ஆனால், வங்கம் எங்கிலும் திரிணமூல் காங்கிரஸ் பிரசாரத்துக்காக 3 ஹெலிகாப்டர்களை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறது. இதிலிருந்தே தெரிகிறது! பாஜக மிகத் தீவிரமாக இருக்கிறதென்று.
ஆனால், மேற்கண்ட எல்லாவித முன்னெடுப்பும் சத்தமும் தீவிரமும் எல்லாமே மே 4-ஆம் தேதி அழுகையில் போய் முடியும்.”
பிரசரத்தில் அமைச்சர் அமித் ஷா பேசும்போது குறிப்பிட்ட, “திரிணமூல் காங்கிரஸ் குண்டர்கள் தேர்தல் முடிவுகளுக்குப்பின் தலைகீழாகத் தொங்க விடப்படுவர்” என்னும் கருத்தை குறிப்பிட்டுப் பேசிய மமதா, “ஒரு மத்திய அமைச்சராகவும் ஒரு பொறுப்பான தலைவராகவும் இத்தகைய சொற்களை நீங்கள் பயன்படுத்தக் கூடாது. பயங்கரவாதத் தொனியில் நீங்கள் பேசுகிறீர்கள்.
ஆனால், உங்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் பாயாது என்பது எமக்குத் தெரியும். ஆனால், எங்கள் ஆள்களிடம் அவரது பேச்சை காணொலிகளாகப் பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கேட்டுகொண்டேன்.
பிரசாரத்தில் பிரதமர் மோடி செய்வதையெல்லாம் பார்த்தால், அவர் ஏற்கெனவே திரைக்கதை தயாரித்து கேமிராக்களை ஆங்காங்கே வைத்து படம்பிடித்து அதனைத்தொடர்ந்து, யதார்த்தமாக அவர் நடந்துகொள்வதைப் போல நமக்கு காட்டிக்கொள்கிறார்கள்” என்றார்.