தேர்தல் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் மமதா!
மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவை எதிர்த்து, மமதா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது பற்றி...
மேற்கு வங்கத்தில் பவானிபூர் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவை எதிர்த்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) மனு தாக்கல் செய்தார்.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 208 தொகுதிகளில் வெற்றிபெற்று சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்தது. 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் தனது 15 ஆண்டுகால ஆட்சியை திரிணமூல் காங்கிரஸ் கட்சி இழந்தது.
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவர் (எதிர்க்கட்சித் தலைவர்), துணைத் தலைவர், தலைமை கொறடா நியமனத்தில் மமதா பானர்ஜி முடிவுக்கு எதிராக கட்சியில் குரலெழுப்பப்பட்டது. இதனால் கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தன.
Advertisement
Advertisement
தேர்தலுக்கான பணிகள் தொடங்கிய நாள் முதலே மமதா பானர்ஜி தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து, பவானிபூர் தொகுதியில் மமதா பானர்ஜியும் தற்போதைய முதல்வரான சுவேந்து அதிகாரியும் போட்டியிட்டனர். இதில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், பவானிபூர் தொகுதியின் தேர்தல் முடிவை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மமதா பானர்ஜி மனு தாக்கல் செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் கல்யாண் பானர்ஜி, இன்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எஸ்ஐஆர் பணிகளில் முறைகேடு, வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி போன்ற பல்வேறு குற்றச் சாட்டுகளை தேர்தல் ஆணையத்தின் மீது மமதா பானர்ஜி சுமத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.