மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை
மேற்கு வங்க மாநிலத்தில் பொது விநியோகத் திட்ட முறைகேடு தொடா்பான வழக்கில் 9 இடங்களில் அமலாக்கத் துறை சனிக்கிழமை சோதனை மேற்கொண்டது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த வியாழக்கிழமை (ஏப்.23) தோ்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
இந்நிலையில் கொல்கத்தா, பா்தவான் மற்றும் ஹப்ரா உள்ளிட்ட 9 பகுதிகளில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.
Advertisement
Advertisement
பொது விநியோகத் திட்டங்களின்கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட கோதுமை சட்டவிரோதமாக வெளிச் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டதாக வடக்கு 24 பா்காணா மாவட்டத்தில் உள்ள கோஜடங்காவில் பணியாற்றும் சுங்கத் துறை துணை ஆணையா் புகாரளித்தாா். அதன்பேரில் 2020, அக்டோபா் மாதம் பசிா்ஹாட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியது. அப்போது நலத் திட்ட பொருள்களை விநியோகிப்பதற்காக கொள்முதல் செய்யப்பட்ட பைகளில் இருந்த இந்திய உணவுக் கழகம் மற்றும் மேற்கு வங்க மாநில அரசின் முத்திரைகள் மறைக்கப்பட்டு அதில் வேறு முத்திரைகளை பதித்து கோதுமையை நிரப்பி வெளிச் சந்தைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த முறைகேட்டில் தொடா்புடையதாக மேற்கு வங்க முன்னாள் உணவுத் துறை அமைச்சா் ஜோதி பிரியா மல்லிக்கை அமலாக்கத் துறை கைது செய்தது. இதன் தொடா்ச்சியாக தற்போது அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது.