நியூசிலாந்து அமைச்சருடன் தாஜ்மஹாலை பார்வையிட்ட பியூஷ் கோயல்!
இந்தியா - நியூசிலாந்து இடையிலான தடையற்ற வணிக ஒப்பந்தம் நாளை (ஏப். 27) கையெழுத்தாகவுள்ளது.
நியூசிலாந்து வணிகம் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சருடன் மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தாஜ்மஹாலை இன்று (ஏப். 26) பார்வையிட்டார்.
இரு நாடுகளும் நாளை நிபந்தனையற்ற வணிக ஒப்பந்தத்தில் நாளை கையெழுத்திடவுள்ள நிலையில், வணிகத் துறை அமைச்சர்கள் இருவரும் தங்கள் குடும்பத்துடன் தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தனர்.
நியூசிலாந்து அமைச்சருக்கு இந்திய பாரம்பரியம், கலாசாரம், சுற்றுலா தளங்கள் குறித்து பியூஷ் கோயல் எடுத்துரைத்தார்.
Advertisement
இந்தியா - நியூசிலந்து இடையிலான தடையற்ற வணிக ஒப்பந்தத்திற்காக நியூசிலாந்து வணிகம் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர் டாட் மெக்லே அரசுப் பயணமாக இந்தியாவுக்கு வருகைப் புரிந்துள்ளார்.
நாளை ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில், இன்று அமைச்சர் டாட் மெக்லே மற்றும் அவரின் மனைவி நாடின் மெக்லேவை மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அவரின் மனைவி சீமா கோயல் தாஜ்மஹால் உள்ளிட்ட சுற்றுலா தளங்களை சுற்றிக்காட்டினர்.
முன்னதாக நியூசிலாந்து அமைச்சர் டாட் மெக்லேவை வரவேற்ற பியூஷ் கோயல், இரு நாட்டு வணிக உறவை வரையறுக்கும் தருணம் இந்த வருகையின் மூலம் எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். தடையற்ற வணிக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாட்டு வணிக உறவானது மேலும் வலுப்படும் என சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பியூஷ் கோயல் பதிவிட்டுள்ளதாவது:
இந்தியா - நியூசிலாந்து இடையிலான தடையற்ற வணிக ஒப்பந்தம் ஏப். 27 ஆம் தேதி கையெழுத்தாகவுள்ளது. இருதரப்பு கூட்டுப் பயணத்தை வரையறுக்கும் வகையில் இவரின் இப்பயணம் உள்ளது. நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையிலும் மதிப்புகளை பகிர்ந்துகொள்ளும் வகையிலும் உள்ளது. இரு நாடுகளுக்கும் பொதுவான பார்வையாக உள்ள நீடித்த வளத்தையும் நிலையான பொருளாதார வளர்ச்சியையும் இப்பயணம் உறுதிப்படுத்தும் எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான தடையற்ற வணிக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை மார்ச் 2025 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று டிசம்பர் 2025 ஆம் ஆண்டு முடிவை எட்டியது குறிப்பிடத்தக்கது.