ஆம் ஆத்மியில் 'நச்சுத்தன்மை' வாய்ந்த பணிச்சூழல்! மனம்திறந்த ராகவ் சத்தா!
ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக முதல்முறையாக ராகவ் சத்தா கருத்து தெரிவித்திருப்பது பற்றி...
பாஜகவின் இணைந்த மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா, முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராகவ் சத்தா, சந்தீப் பாடக், அசோக் மித்தல் உள்ளிட்ட 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகியது குறித்தும், அக்கட்சிக்கு எதிராகவும் ராகவ் சத்தா திங்கள்கிழமை விடியோ பதிவிட்டுள்ளார்.
Advertisement
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
”நான் ஒரு தொழில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக அரசியலுக்கு வரவில்லை. எனது தொழில் வாழ்க்கையை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளேன். ஒரு அரசியல் கட்சியின் நிறுவன உறுப்பினராக, எனது இளமையின் பொற்காலமான பதினைந்து ஆண்டுகளை ஆம் ஆத்மிக்காக அர்ப்பணித்தேன்.
தற்போது இருக்கும் கட்சி, பழைய கட்சி கிடையாது. கட்சிக்குள் நச்சுத்தன்மை வாய்ந்த பணிச்சூழல் நிலவுகிறது. பணி செய்வதில் இருந்தும், நாடாளுமன்றத்தில் பேசுவதில் இருந்தும் தடுக்கப்பட்டேன்.
கடந்த சில ஆண்டுகளாக, நான் சரியான நபராக இருந்து, தவறான கட்சியில் இருக்கிறேனோ என்று உணர்ந்தேன். அரசியலை விட்டு விலகுவது, உட்கட்சி சீர்திருத்த முயற்சிகளை மேற்கொள்வது அல்லது மாற்று அரசியல் தளத்துக்கு செல்வது ஆகிய மூன்று பரிசீலனையை மேற்கொண்ட பிறகே பாஜகவில் இணைந்துள்ளேன்.
ஒருவரோ அல்லது இருவரோ தவறான முடிவை எடுக்கலாம். ஆனால், 7 பேர் தவறான முடிவெடுக்க வாய்ப்பில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.