தவறான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆம் ஆத்மி: ராகவ் சத்தா
ஆம் ஆத்மி கட்சி தவறான திசையில் சென்று கொண்டிருக்கிறது என ராகவ் சத்தா தெரிவித்தது குறித்து...
ஆம் ஆத்மி கட்சி தவறான திசையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ராகவ் சத்தா இன்று (ஏப்.25) தெரிவித்துள்ளார்.
அண்மையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைமைக்கும் ராகவ் சத்தாவுக்கும் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ராகவ் சத்தா உள்பட 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி வெள்ளிக்கிழமை (ஏப்.24) பாஜகவில் இணைந்துள்ளனர்.
Advertisement
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகவ் சத்தா, “ஆம் ஆத்மி கட்சியைத் தங்கள் ரத்தமும் வியர்வையும் சிந்தி வளர்த்தெடுத்து, மிகுந்த நம்பிக்கையுடன் அக்கட்சியுடன் இணைந்திருந்த ஒவ்வொருவரும், கட்சியை விட்டு விலகிவிட்டனர் அல்லது விலகும் நிலையில் உள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி மிகவும் தவறான திசையில் சென்று கொண்டிருப்பதால், இனி அக்கட்சியுடன் இருக்க யாரும் விரும்பவில்லை.
ஊழல் மற்றும் சமரசத்திற்கு உள்ளானவர்களின் கைகளில் கட்சி இருப்பதாக நாங்கள் அனைவரும் நம்புவதால், ஒரே நேரத்தில் 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆம் ஆத்மி கட்சியை விட்டு வெளியேறினோம். நாங்கள் பயத்தின் காரணமாக கட்சியை விட்டு வெளியேறவில்லை. மாறாக ஏமாற்றம், மனச்சோர்வு மற்றும் வெறுப்பின் காரணமாகவே வெளியேறினோம்” எனத் தெரிவித்தார்.