சிஜேபி போராட்ட மாணவர்களுக்கு உதவி எண் அறிவித்த ஆம் ஆத்மி!
போராட்டக்காரர்களுக்குச் சட்ட மற்றும் மருத்துவ உதவிகள் வழங்க ஆம் ஆத்மி கட்சி உதவி எண்ணை அறிவித்தது பற்றி..
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டக்காரர்கள் மீது மத்திய அரசு நடத்திய ஒடுக்குமுறை நடவடிக்கை, ஆங்கிலேயர்களின் கொடூரத்தை விட மோசமானது என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரின் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகிறது.
திங்கள்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி கட்சியினர் அமைதிப் பேரணி நடத்தியபோது சிஜேபி இளைஞர்களை காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தி, தடியடி நடத்தினர். தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை காவல்துறையினர் வீசினர். இதில் இளைஞர்கள் பலரும் காயமடைந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த இளைஞர்களை அரவிந்த் கேஜரிவால் இன்று சந்தித்துப் பேசினார்.
காயமடைந்த போராட்டக்காரர்களுக்கு மருத்துவ உதவிகளையும், தடுத்து வைக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்குச் சட்ட உதவிகளையும் வழங்க, ஆம் ஆத்மி கட்சி சார்பில் உதவி எண் 8588833548 - ஐ அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறை, மோடி அரசு நமது சொந்தக் குழந்தைகள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறையைப் போன்றது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீதும் ஆங்கிலேயர்கள் இவ்வாறு நிகழ்த்தியதில்லை.
போராட்டக்காரர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் பயப்படத் தேவையில்லை, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். வழங்கப்பட்ட உதவி எண்ணுக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள். நாங்கள் உங்களைத் தொடர்புகொண்டு, சட்டம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவோம் என்று கேஜரிவால் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.