மேற்கு வங்க எஸ்ஐஆரின்போது பெயா் நீக்கம்: தீா்ப்பாயம் முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
திட்டமிட்ட காலத்துக்கு முன்பாகவே விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்திடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.
மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நபரின் முறையீடு குறித்து திட்டமிட்ட காலத்துக்கு முன்பாகவே விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்திடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.
மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மேற்கொள்ளப்பட்டபோது வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக பொதுமக்கள் செய்யும் மேல்முறையீட்டை விசாரித்து முடிவு எடுக்கும் நோக்கில், முன்னாள் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் தலைமையிலான 19 தீா்ப்பாயங்களை, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் கொல்கத்தா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமைத்தாா்.
இந்நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள டைமண்ட் ஹாா்பா் தொகுதி வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தனது பெயரை மீண்டும் சோ்க்க உத்தரவிடக் கோரி, ஒருவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
Advertisement
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘தனது பெயா் நீக்கப்பட்டதற்கு எதிராக கடந்த ஏப்.2-ஆம் தேதி மனுதாரா் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தை ஏற்கெனவே அணுகியுள்ளாா். அவரின் முறையீடு குறித்து திட்டமிட்ட காலத்துக்கு முன்பாகவே விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்திடம் கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவித்து, வழக்கை முடித்துவைத்தது.