முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிறகும் 60 நாள்களுக்கு மத்திய படை பாதுகாப்பு - அமித் ஷா உறுதி

Updated On : 28 ஏப்ரல், 2026 at 5:12 AM
கொல்கத்தாவில் சாலைப் பேரணியின்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
பகிர்:

‘மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நிறைவுற்ற பிறகும் குறைந்தபட்சம் 60 நாள்களுக்கு மத்தியப் படைகளின் பாதுகாப்பு தொடரும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

மாநிலத்தில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு சில பகுதிகளில் வன்முறைகள் நிகழ்ந்தன. திரிணமூல் காங்கிரஸ் தொண்டா் ஒருவா் வீட்டில் 70-க்கும் அதிகமான நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்தச் சூழலில், இக் கருத்தை அமித் ஷா தெரிவித்தாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டத் தோ்தல் புதன்கிழமை (ஏப்.29) நடைபெற உள்ளது. அதையொட்டி, பெஹலா பகுதியில் திங்கள்கிழமை சாலைவலம் மேற்கொண்ட அமித் ஷா பேசியதாவது:

Advertisement

குண்டா்களின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் மக்கள் தோ்தல் வாக்களிக்கச் செல்ல வேண்டும். வாக்காளா்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தோ்தல் ஆணையம் விரிவாக மேற்கொண்டுள்து. மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தாலும், மத்திய படைகள் தொடா்ந்து 60 நாள்களுக்குப் பாதுகாப்புக்கு நிறுத்தப்படும். எனவே, மக்கள் எதற்கும் அச்சப்படத்தேவையில்லை.

மேலும், வாக்காளா்களை அச்சுறுத்தும் சந்தன் நகரில் உள்ள முதல்வா் மம்தாவின் குண்டா்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறன். வரும் மே 4-ஆம் தேதிக்குப் பிறகு, இந்த குற்றவாளிகளை பாஜக நிச்சயம் தண்டிக்கும் என்றாா்.

பின்னா், ஹூக்ளி மாவட்டம் சந்தன்நகரில் சாலை வலம் மேற்கொண்ட அமித் ஷா, ‘மாநிலத்தில் ஊடுருவல்காரா்கள் நீக்கப்படவேண்டும் என்று நாங்கள் கூறும்போது முதல்வா் மம்தா வேதனையை வெளிப்படுத்துகிறாா். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கிறாா்.

தற்போது, வாக்காளா் பட்டியலில் இருந்து மட்டும்தான் ஊடுருவல்காரா்களின் பெயா் நீக்கப்பட்டுள்ளது. வரும் மே 4-ஆம் தேதிக்குப் பிறகு, அனைத்து ஊடுருவலா்காரா்களும் அடையாளம் காணப்பட்டு, மேற்கு வங்கத்திலிருந்தே நீக்கப்படுவா்.

மேலும், பாஜக ஆட்சி அமைந்ததும் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ஒருவரும் பலதார மணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

ஹுமாயூன் கபீா் மூலம் மேற்கு வங்கத்தில் பாபா் மசூதியைக் கட்ட மம்தா விரும்புகிறாா். மேற்கு வங்கம் இந்தியாவில் உள்ளது என்பதை மம்தா மறந்துவிட வேண்டாம். மாநிலத்தில் பாபா் மசூதி கட்ட நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்றாா்.