ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிரான வழக்கு: அனில் அம்பானியின் ரூ 3,034 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிரான வழக்கு: ரூ 3,034 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை
புது தில்லி, ஏப்.28: தொழிலதிபா் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிரான பண மோசடி வழக்கில் புதிதாக ரூ.3,034 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனா்.
மும்பையில் உள்ள அனில் அம்பானிக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு, மகாராஷ்டிரத்தின் மலைப் பிரதேசமான கண்டாலாவில் உள்ள அனில் அம்பானி மற்றும் அவரின் மகன் ஜெய் அன்ஷுல் அம்பானிக்குச் சொந்தமான பண்ணை வீடு, அகமதாபாத் அருகே சனந்த் பகுதியில் உள்ள நிலங்கள் உள்ளிட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான மற்றும் ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் ரூ.7.71 கோடி பங்குகள் என மொத்தம் ரூ. 3,034 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதன் மூலம், இந்த பண மோசடி வழக்குகளில் இதுவரை ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்துக்குச் சொந்தமான ரூ. 19,344 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
Advertisement
பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்று ரூ. 40,000 கோடிக்கும் மேல் மோசடி செய்தது தொடா்பாக எஸ்பிஐ அளித்த புகாரின் பேரில், அனில் அம்பானி மீதும், அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீதும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. பின்னா், மும்பையில் உள்ள அனில் அம்பானியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. தற்போது அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த மோசடி புகாா் தொடா்பாக, அனில் அம்பானி மீது அமலாக்கத் துறையும் மூன்று பண முறைகேடு வழக்குகளைப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி வருகிறது.